LATEST NEWS
“ஐயோ ரொம்ப பயமா இருக்கு” கடற்கரையில் நின்று அலறி தீர்த்த மக்கள்… வினோத சம்பவத்தின் உண்மை பின்னணி..!!
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ‘ஓஷன் பீச்’ கடற்கரையில், நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றாகத் திரண்டு கடலை நோக்கி உரக்கக் கத்தி தங்களது மன அழுத்தத்தை வெளிப்படுத்திய “கூட்டு அலறல் நிகழ்வு” பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. டேனியல் ஈகன் என்பவரால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த வித்தியாசமான கூட்டத்திற்கு “கடலை நோக்கி அடிவயிற்றிலிருந்து அலறும் நிகழ்வு” என்று பெயரிடப்பட்டிருந்தது. நவீன வாழ்க்கை முறையில் மக்கள் எதிர்கொள்ளும் விலைவாசி உயர்வு, வாடகை உயர்வு, ஏஐ தொழில்நுட்பத்தால் வரும் வேலைவாய்ப்பு பயம் மற்றும் குடும்பப் பிரச்சனைகள் போன்ற விரக்திகளை வெளிப்படுத்த மக்கள் இந்த மேடையைப் பயன்படுத்திக் கொண்டனர்.
இந்தக் கூட்டு அலறல் நிகழ்வின் ஒரு பகுதியாகக் குரலின் அளவு மற்றும் பாணியின் அடிப்படையில் ஒரு விசித்திரமான கத்துதல் போட்டியும் நடத்தப்பட்டது. இதில் ஒலிம்பியா குக்லியெமோட்டோ என்ற பெண்மணி, உலக சாதனைக்கு மிக நெருக்கமாக 121.9 டெசிபல் ஒலியில் அலறி முதல் பரிசைத் தட்டினார். அவருக்கு வெகுமதியாக ஒரு சிறிய மெகா போன் வழங்கப்பட்டது. வெறும் கத்துவதோடு மட்டுமில்லாமல், பங்கேற்பாளர்களுக்கு முறையான குரல் தசைப் பயிற்சிகள் அளிக்கப்பட்ட பின்னரே இந்த அலறல் போட்டிகள் தொடங்கின.
மாலை வேளையில் அனைவரும் இணைந்து ஒரே நேரத்தில் மிகப்பெரிய ஒலியில் அலறித் தங்களது மன பாரத்தைக் குறைத்துக் கொண்டனர். இந்த வினோத நிகழ்வின் நிறைவாக, பங்கேற்பாளர்கள் தாங்கள் கொண்டு வந்த நறுக்கிய பழங்களைப் பகிர்ந்து உண்டு மகிழ்ந்தனர். மன அழுத்தத்தைப் போக்கிக் கொள்ளும் ஒரு ஆரோக்கியமான சமூகக் கூட்டமாக இந்த வினோத அலறல் திருவிழா சான் பிரான்சிஸ்கோவில் வெற்றிகரமாக முடிவடைந்தது.
