LATEST NEWS
“விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்க வேண்டும்” தமிழக முதல்வர் விஜய் குறித்துப் பேசியதற்கு தவெக MLA சுகுமார் அதிரடி எச்சரிக்கை..!!
தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜாடை மாடையாகப் பேசியதாகக் கூறி, நடிகர் விஜய் சேதுபதிக்கு சூலூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அறுதிப் பெரும்பான்மையுடன் மக்கள் ஆதரவோடு வெற்றி பெற்றுத் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் குறித்து விஜய் சேதுபதி விமர்சிப்பது ஏற்புடையதல்ல என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், யாருடைய தூண்டுதலின் பேரில் விஜய் சேதுபதி இவ்வாறு பேசினார் என்றும், தற்போதைய சூழலில் பிக்பாஸ் மற்றும் சீரியல்களைத் தவிர்த்துவிட்டு மக்கள் தவெக-வின் மக்கள் பேரவை நிகழ்வுகளையே உன்னிப்பாக கவனித்து வருவதால், அதன் காழ்ப்புணர்ச்சியில் தாக்கிப் பேசினாரா அல்லது தன்னை ஒரு பெரிய ஆள் எனக் காட்டிக் கொள்ளப் பேசினாரா என்று தெரியவில்லை எனவும் அவர் சாடியுள்ளார்.
விஜய் சேதுபதியின் இந்த பேச்சுக்கு அவர் உடனடியாகப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள எல்.எல்.ஏ சுகுமார், தவறும் பட்சத்தில் அவர் தமிழகத்தில் செல்லும் இடங்களிலெல்லாம் தவெக தொண்டர்கள் சார்பாக அவரைத் தடுத்து நிறுத்தி உரிய கேள்விகள் எழுப்பப்படும் எனத் தெரிவித்துள்ளார். சினிமா மார்க்கெட்டைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவே விஜய் சேதுபதி இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பேசி வருவதாகக் குறிப்பிட்ட அவரது இந்த பேட்டி, தவெக மற்றும் திரைத்துறையினர் இடையே தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
