LATEST NEWS
பகீர்..! மின் இணைப்பு கொடுக்க ரூ .7,000 லஞ்சம்… சேலத்தில் பெண் மின்வாரிய அதிகாரி லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கையும் களவுமாக சிக்கியது எப்படி..?
சேலத்தில் தொழிற்சாலைக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக ரூ.7 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மின்வாரிய உதவி பொறியாளர் லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்களின் வலையில் சிக்கி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தைச் சேர்ந்த ஒருவர், தேங்காய் நார் கயிறு தயாரிக்கும் தனது தொழிற்சாலைக்கு புதிய மின் இணைப்பு பெறுவதற்காக கே.ஆர். தோப்பூரில் செயல்பட்டு வரும் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்த கவிதா என்பவரிடம் விண்ணப்பித்துள்ளார். விண்ணப்பத்தை பரிசீலித்த உதவி பொறியாளர், மின் இணைப்பு வழங்குவதற்கு ரூ.7 ஆயிரம் லஞ்சமாக வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
லஞ்சம் வழங்க விருப்பமில்லாத தொழிற்சாலை உரிமையாளர், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்களிடம் புகார் அளித்தார். அதன்பேரில், காவலர்களின் அறிவுறுத்தலின்படி ரசாயனப் பொடி தடவப்பட்ட ரூ.7 ஆயிரத்தை உதவி பொறியாளர் கவிதாவிடம் வழங்கினார். அந்தப் பணத்தை அவர் பெற்றுக் கொண்டபோது, அங்கு மறைந்திருந்து கண்காணித்து வந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
