LATEST NEWS
“கச்சத்தீவு பற்றிக் கேட்டால் ‘நோ கமெண்ட்ஸ்’…தளபதியின் நண்பனாய் பிறப்பது அரிது… ஆனா மேடையில் ‘தளபதி புராணம்’…தவெக அமைச்சர் ஸ்ரீநாத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…!
2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என்ற வாக்குறுதியின்படி விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான இந்த அமைச்சரவையில் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் போன்ற ஒரு சில மூத்த தலைவர்களைத் தவிர, பெரும்பாலான இடங்கள் இளைஞர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன. “அதிகாரத்திற்கு இளைஞர்கள் வந்தால் மாற்றம் நிகழும்” என்ற நம்பிக்கையில் ஒட்டுமொத்த தமிழகமும் இந்த இளம்படையின் செயல்பாடுகளை உற்றுநோக்கி வருகிறது. இருப்பினும், முதன்முறையாகப் பொறுப்பேற்றுள்ள இந்த இளம் அமைச்சர்களின் சில ஆரம்பகாலத் தடுமாற்றங்கள் தற்போதைக்கு விமர்சனங்களைச் சம்பாதித்து வருகின்றன.
தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தமிழ்நாட்டிற்குத் தொழில் தொடங்க இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் அழைப்பு விடுத்தது அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திருச்செந்தூர் கோயிலில் ஆய்வு செய்தபோது அவரிடமே அர்ச்சகர்கள் 4,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய விவகாரம் பெரும் சர்ச்சையானது. லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் மீது பணிநீக்க நடவடிக்கை எடுக்காமல், வெறும் விளக்கக் கடிதம் மட்டுமே பெறப்பட்டதாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இளம் அமைச்சர்களுக்குக் கூடுதல் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று தவெக ஆதரவாளர்கள் ஒருபுறம் வாதாடினாலும், இவர்களின் இத்தகைய செயல்பாடுகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கிண்டலுக்கு உள்ளாகி வருகின்றன.
இப்படியொரு இக்கட்டான சூழலில், முதலமைச்சர் விஜய்யின் நெருங்கிய நண்பரும், நடிகருமான தற்போதைய மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் அண்மையில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பேச்சு இணையத்தில் பயங்கரமாக ட்ரெண்டாகி வருகிறது. மேடையில் பேசிய அவர், “அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது.. அதனினும் அரிது தளபதியின் நண்பனாய் பிறப்பது” என்று தத்துவப் பாடலை மாற்றிப் பாடி முதலமைச்சரைப் புகழ்ந்து தள்ளியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்கள் கச்சத்தீவு உள்ளிட்ட மீனவர்களின் முக்கியப் பிரச்சினைகள் குறித்துக் கேள்வி எழுப்பியபோது, அதற்குப் பதிலளிக்கத் தெரியாமல் ‘நோ கமெண்ட்ஸ்’ என்று மழுப்பிவிட்டுச் சென்ற அமைச்சர் ஸ்ரீநாத், தற்போது துறை சார்ந்த விஷயங்களைப் பேசாமல் இப்படிப் பாராட்டு விழா நடத்திக் கொண்டிருப்பதை நெட்டிசன்கள் மீம்ஸ்கள் போட்டுத் தீவிரமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
