LATEST NEWS
மறுஜென்மம் எடுத்தாலும்…! கட்சியின் பிளவால் மனமுடைந்து அதிமுக வர்த்தக அணி செயலாளர் தற்கொலை… தஞ்சைக்கு அவசரமாகப் புறப்பட்ட பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…. பரபரப்பு சம்பவம்…!!
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின் அதிமுகவில் ஏற்பட்டுள்ள தொடர் பிளவுகள் மற்றும் உட்கட்சிப் பூசல்களால் மனம் உடைந்த தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக வர்த்தக அணி இணைச் செயலாளர் பூக்கடை மகேந்திரன் என்பவர், பெட்ரோல் ஊற்றித் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைய தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தனித்தனியாகச் செயல்பட்டதும், சிலர் திமுக மற்றும் தவெக ஆகிய மாற்றுக்கட்சிகளில் இணைந்ததும் எளிய தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இத்தகைய அரசியல் சூழலில், கட்சியின் தற்போதைய நிலவரத்தைக் கண்டு மிகுந்த வேதனையடைந்த மகேந்திரன் இந்த விபரீத முடிவைத் தேடிக்கொண்டார்.
அவர் மரணத்திற்கு முன் வெளியிட்ட உருக்கமான கடைசி வீடியோ பதிவில், தன்னைப் போன்ற எளிய தொண்டர்களின் மனவேதனையைக் குறிப்பிட்டு, பிரிந்து கிடக்கும் தலைவர்களும் நிர்வாகிகளும் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒன்றுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், தனது மறைவிற்குப் பிறகாவது கட்சி ஒற்றுமையுடன் செயல்பட்டு மீண்டும் ஆட்சியைப் பிடிக்கப் பாடுபட வேண்டும் என்றும், தனது உடலுக்கு எடப்பாடியார் நேரில் வந்து மாலை அணிவிக்க வேண்டும் என்பதே தனது கடைசி ஆசை என்றும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, உயிரிழந்த நிர்வாகியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளுக்கு விரைந்துள்ளார்.
