LATEST NEWS
என்னது…! கிளியை கண்டுபுடிச்சா ரூ.50000 ஆ..? கூண்டில் அடைக்காத செல்லப் பறவை காணும்… தேடலுக்கு மட்டுமே ரூ.15,000 செலவிட்ட குடும்பம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரின் அல்காபுரி பகுதியில் வசிக்கும் ஓஜா குடும்பத்தின் செல்லக் கிளியான ‘சகுந்தலா’ திடீரென காணாமல் போயுள்ளது. சகுந்தலா என்பது சாம்பல் மற்றும் சிவப்பு நிறத் தழும்பு போன்ற அடையாளத்தைக் கொண்ட ஒரு பச்சை நிற பெண் கிளி ஆகும். திங்கள்கிழமை அன்று வீட்டின் ஜன்னல் திறந்திருந்ததால் அது பறந்து சென்றுவிட்டது. பல நாட்கள் ஆகியும் கிளி திரும்ப வராததால், அதைப் பிரிந்த சோகத்தில் குடும்பத்தின் பாட்டியும் பேத்தியும் சாப்பிடாமல் தொடர்ந்து அழுது கொண்டு சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
காணாமல் போன கிளியைப் பாதுகாப்பாகக் கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.50,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று ஓஜா குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். கிளியைத் தேட நகரத்தின் முக்கிய பகுதிகள் மற்றும் காலனிகளில் இ-ரிக்ஷா மூலமாகவும் லவுட் ஸ்பீக்கர் மூலமாகவும் தொடர்ந்து அறிவிப்புகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்தத் தேடல் நடவடிக்கைக்காக மட்டுமே குடும்பத்தினர் இதுவரை சுமார் ரூ.15,000 வரை செலவிட்டுள்ளனர்.
சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு இக்குடும்பத்திற்கு வந்த இந்தச் செல்லக் கிளியை அவர்கள் எப்போதும் கூண்டில் அடைத்து வைத்ததில்லை. அது வீடு முழுவதும் சுதந்திரமாகப் பறந்து, குடும்பத்தினரின் தோள்களில் அமர்ந்து கொஞ்சி மகிழும். “எங்களுக்கு இந்த ரூ.50,000 பணம் பெரிய விஷயமல்ல, எங்கள் உண்மையான சொத்தே சகுந்தலா தான்; அது திரும்ப வந்தால்தான் வீட்டில் உள்ளவர்களின் முகத்தில் சிரிப்பு திரும்பும்” என்று குடும்பத்தைச் சேர்ந்த அணில் ஓஜா தெரிவித்துள்ளார்.
