LATEST NEWS
“தளபதி ரசிகர் மன்றத்திலிருந்து அரசின் முக்கிய பொறுப்புக்கு..!” யார் இந்த ‘குரு தலைவா’..? மிரள வைக்கும் பின்னணி..!!
திமுக ஆட்சிக் காலத்தில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் கீழ் செயல்பட்டு வந்த ‘உண்மைச் சரிபார்ப்புக் குழுவின்’ திட்ட இயக்குநராக, யூடர்ன் இணையதளத்தின் ஆசிரியர் ஐயன் கார்த்திகேயன் மாதத்திற்கு ரூ.3 லட்சம் ஊதியம் மற்றும் அலுவல் வாகன வசதியுடன் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகப் (தவெக) அரசு, இந்த அமைப்பில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. அதன்படி, திட்ட இயக்குநருக்கான ஊதியம் குறைக்கப்பட்டு, அவருக்கு வழங்கப்பட்டிருந்த அலுவல் வாகன வசதியும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. மேலும், முந்தைய ஆட்சியில் 60 ஆக இருந்த பணியாளர்களின் எண்ணிக்கை தற்போது 14 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவின் பெயர் மாற்றப்பட்டு, இனி ‘தகவல் நம்பகத்தன்மைப் பிரிவு’ என்ற பெயரில் இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய அமைப்பின் தலைவராக, தமிழக வெற்றிக் கழகத்தின் சமூக ஊடகப் பிரிவுத் தலைவரும், ‘ஆன்லைன் தளபதி ஃபேன்ஸ் கிளப்’ நிறுவனருமான குரு தலைவா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இதன் ஒருங்கிணைப்பாளராக பிரசன்னா, மக்கள் தொடர்பு அலுவலராக சுஜிதா மற்றும் செய்தி-மக்கள் தொடர்புத் துறையின் சமூக ஊடகப் பிரிவு சிறப்பு அலுவலராக தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் திவ்யா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகள், போலியான மற்றும் உருமாற்றப்பட்ட தகவல்களைக் கண்டறிந்து, அவற்றை அதிகாரப்பூர்வ தகவல்களோடு ஒப்பிட்டு உண்மை நிலையை வெளிக்கொணர்வதே இந்தப் பிரிவின் முக்கியப் பணியாகும். தவறான தகவல்களால் பொதுமக்களிடையே தேவையில்லாத பதற்றமோ அல்லது குழப்பமோ ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கிலும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையிலும் இப்புதிய பிரிவு தீவிரமாகச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
