LATEST NEWS
“பெரம்பூரா? திருச்சியா? முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு…உதயநிதிக்கு துணையாக களமிறங்கும் கமல் ஹாசன்… திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் வெடிக்கப்போகும் அரசியல் வெடிகுண்டு…!க்ளைமாக்ஸ் நெருங்கும் இடைத்தேர்தல்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வரலாற்று வெற்றி பெற்றிருந்தார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தற்போதைய முதல்வருமான ஜோசப் விஜய். முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சட்ட விதிமுறைகளின்படி தனது பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக் கொண்ட அவர், திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார். இதன் காரணமாக திருச்சி கிழக்கு தொகுதி தற்போது காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு, விரைவில் அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் கட்சியான தவெக சார்பில் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் கரிகாலன் ஆகியோரது பெயர்கள் வேட்பாளர் ரேசில் முன்னணியில் உள்ள நிலையில், இந்த இடைத்தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்தச் சூழலில், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் “பொது வேட்பாளராக” மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசனை முன்னிறுத்த வேண்டும் என அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தலைமைக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போதைய அரசியல் சூழலில், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் சிறப்பாகச் செயல்பட்டு வந்தாலும், சட்டமன்றத்திற்குள் இன்னும் வலுவான, அனுபவம் நிறைந்த ஒரு அரசியல் ஆளுமை தேவை என்றும், அதற்கு கமல் ஹாசன் மிகச் சரியான தேர்வாக இருப்பார் என்றும் மநீம நிர்வாகிகள் வலுவாக நம்புகின்றனர்.
மேலும், தற்போதைய ஆளும் கட்சியான தவெக, அதிமுகவை மட்டும் பலவீனப்படுத்தாமல், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் அமைச்சரவையில் பங்கு என ஆசைவார்த்தை காட்டி இழுத்து வருவதாக மநீம தரப்பில் கூறப்படுகிறது. இதனால் திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களின் பேச்சுக்கள் காரணமாகக் கூட்டணியில் சில சலசலப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தச் சூழலைச் சரியாகக் கையாள, கமல் ஹாசனை பொது வேட்பாளராக நிறுத்துவதே புத்திசாலித்தனமான அரசியல் நகர்வாக இருக்கும் என அவர்கள் வாதிடுகின்றனர். தற்போதைய நிலையில் திமுக கூட்டணியில் அதிருப்தியில் உள்ள விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகிய இருவரிடமும் கமல் ஹாசனுக்கு நல்ல நட்பு உள்ளது இந்தத் தேர்தலில் பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது.
இதுமட்டுமின்றி, பாமக வழக்கமாக இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற கொள்கையைக் கொண்டிருப்பதும், வலுவான பொது வேட்பாளராக கமல் ஹாசன் நின்றால் ஆளும் தவெக-வை வீழ்த்த அதிமுக தலைமையும் ஆதரவு அளிக்கத் தயாராக இருக்கும் என்பதும் மநீம நிர்வாகிகளின் கணக்காக உள்ளது. கடந்த 2019 மற்றும் 2021 தேர்தல்களில் திருச்சி கிழக்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்றுள்ளதோடு, அங்கு கமலுக்குப் பெரும் ரசிகர் பட்டாளமும் உள்ளது. எனவே, தமிழகம் முழுவதுமுள்ள மநீம தொண்டர்கள் திருச்சியில் முகாமிட்டுக் களப்பணி செய்யக் காத்திருக்கும் வேளையில், இந்த வியூகத்தை மநீம தலைவர் கமல் ஹாசன் உள்ளன்போடு ஏற்றுக்கொண்டு களம் காண வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக உள்ளது.
