LATEST NEWS
விஜய் நடத்துவது இரவல் ஆட்சி..! துரோகிகள் போனா என்ன? புதுசா வருவோம்..! முதல்வர் விஜய்க்கு எதிராக சீறிய எம்பி… அதிமுக காட்டிய அதிரடி ஆக்ஷன்..!!
தமிழ்நாட்டில் நிலவி வரும் அரசியல் சூழலில், அதிமுகவிலிருந்து நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தவெக கட்சிக்குத் தாவி வரும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் ஐ.எஸ். இன்பதுரை, தவெக தலைவரும் முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய்யின் ஆட்சியை ‘இரவல் ஆட்சி’ என்று மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். சுயலாபத்திற்காகவும் பதவி ஆசைக்காகவும் கொள்கை இல்லாமல் கட்சி மாறுபவர்களை ‘மீன் கடை பூனைகள்’ என்று வர்ணித்த அவர், மற்ற கட்சிகளின் தலைவர்களை இரவலாகப் பெற்றுத்தான் விஜய் தற்பொழுது பொம்மை ஆட்சி நடத்தி வருகிறார் என்றும், தவெகவிற்கு என்று சொந்தமாக எந்தவொரு தியாக வரலாறும் கிடையாது என்றும் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய இன்பதுரை, தமிழக சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரின் செயல்பாடுகளையும் கடுமையாக விமரிசித்தார். தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அதிமுக தலைமை புகார் அளித்தும், சபாநாயகர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகக் கூறினார். மேலும், தவெகவில் இணைவதற்காகத் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்த 4 எம்.எல்.ஏ-க்களின் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படாமல், சபாநாயகர் அதனை வேண்டுமென்றே முடக்கி வைத்துள்ளார் என்றும், இது ஒரு ஜனநாயகப் படுகொலை என்றும் அவர் ஆவேசமாகப் பேசினார்.
கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் எம்.சி. சம்பத், கடம்பூர் ராஜு உள்ளிட்ட 4 முன்னாள் அமைச்சர்களும், 60-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகளும் அதிமுகவிலிருந்து விலகி முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளனர். இந்தத் தொடர் கட்சித் தாவல்களால் அதிமுக பலவீனமடைந்து வருவதாக எழுந்துள்ள விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த இன்பதுரை, “துரோகிகள் போவதால் அதிமுகவிற்கு எந்தப் பாதிப்பும் இல்லை, இளைஞர்களைக் கொண்டு புதிய வலிமையான அதிமுகவை உருவாக்குவோம்” என்று கூறினார். ஏற்கனவே தவெக – திமுக இடையே மோதல் முற்றியுள்ள நிலையில், தற்பொழுது அதிமுகவும் தவெக அரசுக்கு எதிராகக் கடுமையான போர்க்கொடி தூக்கியிருப்பது தமிழக அரசியலை மேலும் சூடாக்கியுள்ளது.
