LATEST NEWS
பாமகவை நோக்கித் திரும்பிய பனையூர் பார்வை..! அன்புமணி விமர்சித்தாலும் அசராத விஜய்… தமிழக அரசியலில் வெடிக்கப்போகும் புதிய கூட்டணி..!!
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு தற்பொழுது தனித்து ஆட்சி நடத்தி வரும் சூழலில், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் எதிர்கால அரசியல் கணக்குகளை மனதில் வைத்துப் பனையூர் தவெக தலைமை அலுவலக வட்டாரத்தில் புதிய அரசியல் வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. கரூரில் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தவெக அரசை விமர்சித்துப் பேசியிருந்த போதிலும், திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு வலுவான கூட்டணியை உருவாக்கப் பாமகவை தவெக பக்கம் இழுக்க முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாகப் புதிய தகவல்கள் கசிந்துள்ளன.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் நீடித்த பாமக, தற்பொழுது அதே கூட்டணியில் தொடர்வதா அல்லது மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுப்பதா என்ற தீவிர ஆலோசனையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் தவெக தலைமை, வன்னியர் சமூக வாக்குகளைக் கணிசமாகப் பெற்றுள்ள பாமகவை இணைத்துக் கொள்வதன் மூலம் வட தமிழகத்தில் தவெகவின் பலத்தை இருமடங்காக அதிகரிக்க முடியும் என்றும், இதன் மூலம் பிரதான எதிர்க்கட்சியான திமுகவிற்கு மிகப்பெரிய முட்டுக்கட்டைப் போடலாம் என்றும் பனையூர் வட்டாரம் கணக்கு போடுகிறது.
இந்த ரகசியக் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவியும், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவருமான செளமியா அன்புமணியைத் தவெக அமைச்சரவையில் இணைப்பதற்கான ஒரு பம்பர் ஆஃபரையும் தவெக தரப்பு முன்வைத்துள்ளதாகத் தெரிகிறது. சமூக நலன் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த துறைகளில் தீவிரமாக இயங்கி வரும் செளமியா அன்புமணியை அமைச்சராக்குவதன் மூலம், பாமகவிற்குப் பெரிய அளவிலான அதிகாரப் பகிர்வை வழங்கி கூட்டணியைப் பலப்படுத்த முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாகவும், இந்த ரகசியத் தூது பாமக தலைமையைப் பலமாக யோசிக்க வைத்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் விவாதம் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
