CRIME
“உடலெங்கும் காயங்களுடன் அலறிய சிறுமி” பால் வாங்கச் சென்ற இடத்தில் 3 வயது குழந்தையை சீரழித்த வடமாநில நபர்… 20 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்த நீதிமன்றம்..!!
இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த தேசுராஜ் (48) என்ற வடமாநிலத் தொழிலாளி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே பில்லாந்தாங்கல் கிராமத்தில் தங்கி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி 21 அன்று, அதே கிராமத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி தனது பாட்டியுடன் பால் வாங்கச் சென்றுவிட்டு நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, தேசுராஜ் அச்சிறுமியைத் தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
விளையாடச் சென்ற குழந்தை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால்த் தேடி வந்த தாய், தேசுராஜின் வீட்டிலிருந்து சிறுமி அழுதுகொண்டே வெளியே வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். குழந்தையின் உடலில் இருந்த காயங்களைக் கண்டு விசாரித்தபோது, வடமாநிலத் தொழிலாளி செய்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது. இத்தகவலையறிந்த அப்பகுதி மக்கள் தேசுராஜைப் பிடித்துத் தர்மஅடி கொடுத்து செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இவ்வழக்கு திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் முடிவில், குற்றம் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால், நீதிபதி காஞ்சனா குற்றவாளி தேசுராஜுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். தீர்ப்பைத் தொடர்ந்து அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
