CRIME
நெஞ்சை நடுங்கவைக்கும் கொடூரம்…! விளையாடிவிட்டு தூங்கிய மாற்றுத்திறனாளி மகன்… சுத்தியலால் அடித்தே கொன்ற மனநலன் பாதிக்கப்பட்ட தந்தை..! ஜபல்பூரில் நடந்த பகீர் சம்பவம்..!!
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டம், பெல்கேடா காவல் எல்லைக்குட்பட்ட பஸேரி கிராமத்தில் நெஞ்சை பதறவைக்கும் துயரச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்குள்ள வீட்டில் தரையில் தூங்கிக் கொண்டிருந்த 4 வயதான மாற்றுத்திறனாளி சிறுவன் பிரேம் சிங்கை, அவனது தந்தை துளசிராம் லோதி சுத்தியலால் கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், கொலை வழக்கில் தந்தையைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் புதன்கிழமை பிற்பகல் 2:30 மணி முதல் 3:00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் நடந்துள்ளது. வீட்டில் விளையாடிவிட்டு தரையில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனின் தலை மற்றும் கைகளில், அருகில் இருந்த சுத்தியலை எடுத்து துளசிராம் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் சிறுவனின் வலது கண்ணுக்கு மேல் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவத்திற்கு முன்பாகவே, அன்று காலை முதலே துளசிராம் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தகராறு செய்து அவர்களை அடித்து துன்புறுத்தி வந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
30 வயதான குற்றவாளி துளசிராம் லோதி கடந்த 18 ஆண்டுகளாக மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர் என ஏ.எஸ்.பி சூர்யகாந்த் சர்மா மற்றும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். கிராமத்தில் சமோசா கடை நடத்தி வந்த துளசிராமின் மனநிலை கடந்த சில நாட்களாகவே மிகவும் மோசமடைந்து வன்முறையாக மாறியிருந்ததாகவும், 8 நாட்களுக்கு முன்பும் வீட்டில் பெரும் கலாட்டா செய்ததால் அவரை குடும்பத்தினர் சிகிச்சைக்காக ஜபல்பூருக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இக்கொடூர சம்பவம் நடந்ததும் துளசிராமின் தந்தை தரவர் சிங் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கவே, காவல்துறையினர் உடனடியாக வந்து கொலையாளியைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
