CRIME
“யாரோ கத்தியோட என்னைத் துரத்துறாங்க மா” போன் பண்ணி மனைவியிடம் கதறிய கணவன்… அடுத்த நொடியே 6 மாதப் பகையை முடித்த ஆறு பேர் கும்பல் – ராமநாதபுரத்தில் கொடூரம்..!!
ராமநாதபுரம் மாவட்டம் செந்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் (26) என்ற வாலிபர், தொழில் போட்டி மற்றும் முன்விரோதம் காரணமாகப் பின்தொடர்ந்து துரத்திய கும்பலால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கரிமூட்டம் போடும் தொழில் செய்து வந்த ஆகாஷுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் இடையே கடந்த ஜனவரி மாதம் தொழில் போட்டி காரணமாக மோதல் ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த முன்விரோதத்தின் தொடர்ச்சியாக, முருகனின் மகனான விஜய் (26) என்பவர் ஆகாஷைக் கொலை செய்துவிடுவதாகத் தொடர்ந்து போனில் மிரட்டி வந்துள்ளார். இதனால் பயந்துபோன ஆகாஷ், தனது மனைவி ஜிம்மானா பேகம் மற்றும் குழந்தையுடன் மண்டலமாணிக்கம் பகுதியில் தங்கி வாழ்ந்து வந்துள்ளார். சம்பவத்தன்று ஆகாஷ் மண்டலமாணிக்கத்தில் இருந்து மதுரை நோக்கித் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அவர் திருச்சுழி வழியாகச் சென்றபோது, விஜய் மற்றும் அவரது நண்பர்கள் ஆயுதங்களுடன் ஆகாஷைப் பின்தொடர்ந்து பயங்கரமாகத் துரத்தியுள்ளனர். மரண பயத்தில் ஓடிய ஆகாஷ், உடனடியாகத் தனது மனைவிக்குத் போன் செய்து, “சிலர் ஆயுதங்களுடன் என்னைத் துரத்துகிறார்கள்” என்று கதறியுள்ளார். அதன் பின்னர் அவரது போன் சுவிட்ச் ஆப் ஆனதால், பதறிப்போன மனைவியும் உறவினர்களும் தேடிச் சென்றபோது, ஆகாஷ் சாலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்துள்ளார்.
இதுகுறித்து திருச்சுழி போலீசார் தனிப்படை அமைத்து தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தினர். அதில் கொலை வழக்கில் தொடர்புடைய முருகனின் மகன் விஜய் (26), அவரது நண்பர்களான ரித்தீஷ் (24), முரளி (27), காளிதாஸ் (21), சக்திவேல் (19), தினேஷ்குமார் (19) ஆகிய 6 பேரையும் அதிரடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
