LATEST NEWS
மக்களுக்குத் தண்ணீர் இல்லை… எம்.எல்.ஏ கார் கழுவ தீயணைப்பு வாகனமா..? வைரல் வீடியோவால் மத்தியப் பிரதேசத்தில் பெரும் சர்ச்சை..!!
மத்தியப் பிரதேச மாநிலம் சிங்க்ராலியில், பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராம்நிவாஸ் ஷாவின் சொகுசு காரான டொயோட்டா இன்னோவாவை, அவரது அரசு இல்லத்திற்கு வெளியே சுத்தம் செய்ய தீயணைப்பு வாகனத்தைப் பயன்படுத்திய விவகாரம் தற்போது அம்மாநிலத்தில் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவசர காலத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய அரசு வாகனத்தை, ஒரு மக்கள் பிரதிநிதியின் தனிப்பட்ட பயன்பாட்டிற்குப் பயன்படுத்தியது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில், நகராட்சி ஊழியர்கள் மூன்று பேர் தீயணைப்பு வாகனத்தின் உயர் அழுத்தக் குழாயைப் பயன்படுத்தி, எம்.எல்.ஏ-வின் காரைக் கழுவும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது. தீ விபத்து போன்ற அவசரச் சூழல்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய தண்ணீரையும், வாகனத்தையும் இவ்வாறு வீணடித்தது மற்றும் அரசு ஊழியர்களைத் தனிப்பட்ட வேலைக்குத் தவறாகப் பயன்படுத்தியது ஆகியவை வீடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
இச்சம்பவத்தைக் கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சித் தலைவரான உமங் சிங்கார், பாஜக அரசு மற்றும் அதன் சட்டமன்ற உறுப்பினரின் இந்தச் செயலை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். அரசுக்குச் சொந்தமான அவசரச் சேவைப் பிரிவை, ஆளுங்கட்சியினர் தங்களின் அதிகார பலத்தால் சொந்தத் தேவைக்காகத் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
