LATEST NEWS
“கொத்து புரோட்டா போட்டுட்டேன்” Dash Dash ன்னு முதல்வர் சொன்னதெல்லாம்… முன்னாள் சபாநாயகர் அப்பாவு அதிரடி..!!
முன்னாள் சபாநாயகர் அப்பாவு தனது எக்ஸ் தளப் பதிவில், சட்டப்பேரவையின் மாண்பு மற்றும் மரபுகள் நடுநிலையோடு காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். சட்டமன்ற நடவடிக்கைகள் நேரலை செய்யப்படும்போது, உறுப்பினர்கள் தவறுதலாகப் பேசும் கருத்துகளால் மக்களிடையே அமைதியின்மை ஏற்படக் கூடாது என்பதற்காகவே, 10 நிமிடங்கள் தாமதமாக நேரலை ஒளிபரப்பும் நடைமுறை கொண்டு வரப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட பேச்சுக்கள் சமூக வலைத்தளங்களில் ‘ரீல்ஸ்’ ஆக பரவுவதைத் தடுப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும் என்றும் அவர் விளக்கியுள்ளார்.
பேரவைக்கு வெளியே எதிர்க்கட்சி எம்.எல்.ஏ ஒருவர் பேசியதை உரிமைக்குழுவுக்கு அனுப்ப முடிவெடுத்தால், அதேபோல் எதிர்க்கட்சி உறுப்பினர்களை அவைக்குள் வைத்துப் பூட்டுவேன் என்றும், “கொத்து புரோட்டா போட்டுவிட்டேன்” என்றும் பேரவைக்கு வெளியே முதலமைச்சர் மிரட்டும் தொனியில் பேசியதையும் அவை உரிமைக்குழுவுக்கு அனுப்புவதுதான் உண்மையான சட்டமன்ற மாண்பாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி சார்ந்த விவகாரங்களில் சட்டப் பேரவை ஒரே மாதிரியான நடுநிலை அணுகுமுறையைக் கையாள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எதிர்க்கட்சிகள் பொதுநலன் சார்ந்த கேள்விகளை எழுப்பும்போது, அதற்கு நேரடியாகப் பதிலளிக்க முடியாமல் அமைச்சர்கள் வரம்பு மீறிப் பேசுவதையும், எதிர்க்கட்சியினரை வம்புக்கு இழுப்பதையும் தவிர்க்க வேண்டும் என்று அப்பாவு வலியுறுத்தியுள்ளார். மேலும், அமைச்சர்களின் பேச்சை விடுத்து எதிர்க்கட்சியினரின் வார்த்தைகளை மட்டும் பூதாகரமாக்குவது சரியல்ல என்றும், நீதிமன்றத்தில் இருக்கும் இரு வேறு விவகாரங்களில் ஒன்றை ஏற்று மற்றொன்றை நிராகரிப்பது பேரவை மரபுக்கு எதிரானது என்றும் தனது பதிவில் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
