LATEST NEWS
எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபமா..? சர்க்கரை நோய் மருந்து நிறுவனங்களிடம் பாஜக ரூ.400 கோடி நிதியா…? மனோ தங்கராஜ் ஆவேசம்..!!
இந்தியாவில் நீரிழிவு நோய்க்கான மருந்துகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் முன்னணி மருந்து நிறுவனங்கள், ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு தேர்தல் பத்திரங்கள் மற்றும் நன்கொடைகள் மூலம் ரூ.400 கோடிக்கும் அதிகமான தொகையை வழங்கியுள்ளதாக திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் தளப் பதிவில் மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்தியாவில் நீரிழிவு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த வேளையில், மத்திய பாஜக அரசு PLI திட்டத்தின் கீழ் இந்த நிறுவனங்களுக்கு ரூ.6,000 கோடிக்கும் அதிகமான தொகையை மானியமாக வழங்கியுள்ளதாகவும், 2024-25ஆம் ஆண்டின் தரவுகளின்படி சர்க்கரை நோய்க்கான மருந்துகளின் சந்தை மதிப்பு ரூ.15,000 கோடியை எட்டியுள்ள நிலையில் Sun Pharma, USV, Torrent, Lupin போன்ற முன்னணி பிராண்டுகள் பல ஆயிரம் கோடி ரூபாயை லாபமாகப் பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மருந்து நிறுவனங்கள் தங்களது பிராண்ட் மருந்துகளை நோயாளிகளுக்குப் பரிந்துரை செய்ய வைக்க, மருத்துவர்களைக் கவர விலையுயர்ந்த பரிசுகள், வெளிநாட்டுச் சுற்றுலாக்கள், நட்சத்திர ஹோட்டல்களில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், வரிச்சலுகைகள் மற்றும் இலவச மருந்து சாம்பிள்கள் போன்ற சலுகைகளை வழங்குகின்றன. இதன் விளைவாக, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தனிநபரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் சராசரியாக ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை மருத்துவச் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர் என்றும், நோயாளிகள் தங்கள் உயிரைக் காப்பாற்றச் செலவிடும் தொகையிலிருந்தே பாஜக தனது கட்சி நிதிக்கான பங்கைப் பெறுகிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாஜக ‘எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம்’ என்ற எண்ணத்துடன் கொள்ளையடிக்கிற நோக்கத்தில் குறியாக இருப்பதாகக் கூறிய மனோ தங்கராஜ், இந்தியாவில் போலியோ, அம்மை போன்ற நோய்களை வெற்றிகரமாக ஒழித்த வரலாறு இருந்தும், நீரிழிவு நோயை ஒரு பொது சுகாதாரப் பிரச்சனையாக அணுகத் தவறி நிதி வசூலிக்கும் வாய்ப்பாகவே பாஜக பார்க்கிறது எனச் சாடியுள்ளார். மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21-ன் படி வாழ்வுரிமையின் பிரிக்க முடியாத ஒரு பகுதிதான் சுகாதார உரிமை என்பதைச் சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், ஆளும் அரசுகள் மக்களுக்குச் சுகாதார உரிமையை இலவசமாகவும் நியாயமான முறையிலும் உறுதி செய்ய வேண்டுமே தவிர, கார்ப்பரேட் லாபத்திற்கும் அரசியல் கட்சி நிதிக்கும் வழியமைக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
