LATEST NEWS
மத்திய அமைச்சர் பதவி கேட்ட திருமா… 2014-ல் நடந்தது மறந்துட்டா..? ஆதாரத்தை வெளியிட ரெடி… திருமாவுக்கு பாஜக மா.வெங்கடேசன் சவால்…!!
பாஜகவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மத்திய அமைச்சரவைப் பதவி கேட்டதாக பாஜக தேசியச் செயலாளர் மா. வெங்கடேசன் கூறிய குற்றச்சாட்டு, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக தலைமையிலான தமிழக அரசில் விசிக அங்கம் வகித்து, அக்கட்சியின் வன்னியரசு அமைச்சராக இருக்கும் சூழலிலும், பாஜக மற்றும் பாமக இல்லாத கூட்டணியிலேயே இருப்போம் என்று திருமாவளவன் தொடர்ந்து கூறிவரும் நிலையிலும் இந்தக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக ஒன்இந்தியா தளத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில் பேசிய மா. வெங்கடேசன், 2014-ஆம் ஆண்டு திருமாவளவன் யாரிடம் பேசினார் என்ற விவரம் தங்களுக்குத் தெளிவாகத் தெரியும் என்று கூறியுள்ளார். மேலும், தான் முன்வைத்த இந்தக் குற்றச்சாட்டைத் திருமாவளவனோ அல்லது விசிக தரப்போ இதுவரை அதிகாரப்பூர்வமாக மறுக்கவில்லை என்றும், தைரியமிருந்தால் திருமாவளவன் இதனை மறுத்துப் பேசட்டும் என்றும் சவால் விடுத்துள்ளார்.
தான் கூறிய தகவல்கள் பொய்யானவை அல்ல என்றும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் தயாராக இருப்பதாகவும் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். திருமாவளவன் முதலில் இந்தச் சம்பவத்தை “இல்லை” என்று பகிரங்கமாக மறுக்கட்டும், அதற்குப் பிறகு எப்போது நடந்தது, யாரிடம் பேசப்பட்டது என்பன உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் தான் உடனடியாக வெளியிடுவதாக அவர் உறுதியளித்துள்ளார்.
மேலும், கடந்த காலச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டிய அவர், முன்பு ஒருமுறை வைகோ மீது வன்னியரசு கடுமையான விமர்சனங்களை வைத்தபோது, விசிக கட்சிக்குத் தான் ரூ.30 லட்சம் கொடுத்ததாக வைகோ பதிலடி கொடுத்ததையும் நினைவு கூர்ந்தார். மேலும் பேசினால் கூடுதல் உண்மைகள் வெளியாகும் என்று வைகோ எச்சரித்த பிறகு விசிக அமைதியானதைப்போல, தற்போதும் ஆதாரங்களை வெளியிட நேரிடும் என்று மா. வெங்கடேசன் எச்சரித்துள்ளார்.
