LATEST NEWS
நெஞ்சை பதறவைக்கும் கோர விபத்து..! அடல் சுரங்கப்பாதை அருகே காரைத் துளைத்த இரும்பு கம்பிகள்.. சுற்றுலாப் பயணி பலியான அதிர்ச்சி வீடியோ வைரல்..!!
இமாச்சலப் பிரதேசத்தின் பிரபல சுற்றுலாத் தலமான அடல் சுரங்கப்பாதையின் வடக்குப் பகுதி அருகே புதன்கிழமை இரவு ஒரு பயங்கரமான சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. அதிவேகமாக வந்த ஸ்கார்பியோ கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, அங்கு கட்டுமானப் பணியில் இருந்த ஒரு பாலத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கைலாஷ் குமார் (34) என்ற சுற்றுலாப் பயணி பரிதாபமாக உயிரிழந்தார், மேலும் காரில் பயணித்த மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
மணாலியிலிருந்து லாஹால் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, இரவு சுமார் 10 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கார் அதிவேகமாக வந்ததால், சுரங்கப்பாதையை விட்டு வெளியேறியவுடன் ஓட்டுநரால் காரை வளைவில் திருப்ப முடியாமல் சந்திரா ஆற்றை நோக்கிப் பாய்ந்துள்ளது. அங்கு கட்டப்பட்டு வரும் பாலத்தின் இரும்பு கம்பிகள் காரின் உடற்பகுதியைத் துளைத்துக் கொண்டு உள்ளே புகுந்ததில், கார் முற்றிலும் நசுங்கி இடிபாடுகளுக்குள் சிக்கியது. இந்த கோர விபத்தின் பதறவைக்கும் வீடியோவும் தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர், காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டு, அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலைப்பிரதேசங்களில், குறிப்பாக மழைக்காலங்களில் இரவு நேரப் பயணங்களைத் தவிர்க்கவும், மிதமான வேகத்தில் செல்லவும் சுற்றுலாப் பயணிகளுக்குக் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
