CINEMA
11 வருடங்களுக்குப் பிறகு இயக்கும் படம்…ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘கில்லர்’ ஷூட்டிங்…படப்பிடிப்பு தளத்தில் பயங்கர விபத்து! எஸ்.ஜே.சூர்யாவின் ‘கில்லர்’ படத்தில் நடந்த அந்த சோகம்…திரையுலகமே அதிர்ச்சி…!”
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநராகவும், தற்போதைய டாப் நடிகராகவும் வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. ‘வாலி’, ‘குஷி’, ‘நியூ’ போன்ற பல வெற்றிப் படங்களைக் கொடுத்த அவர், கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘இசை’ திரைப்படத்திற்குப் பிறகு முழுமையாக நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார். வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் பல படங்களில் முத்திரை பதித்து வரும் எஸ்.ஜே.சூர்யா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குநராகக் களம் இறங்கியுள்ளார். அவர் தற்போது இயக்கி வரும் ‘கில்லர்’ (Killer) திரைப்படம் த்ரில்லர் பாணியில் பான்-இந்தியா படமாக உருவாகி வருகிறது. மேலும், இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பல மடங்கு அதிகரித்துள்ளது.
பல வருடங்களுக்குப் பிறகு எஸ்.ஜே.சூர்யாவின் டிரேட் மார்க் ஸ்டைலில் உருவாகி வரும் ‘கில்லர்’ படத்தின் படப்பிடிப்பு சென்னை பெரம்பூரில் உள்ள பின்னி மில்லில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், அங்கு எதிர்பாராத விதமாகப் பெரும் விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. படத்தில் இடம்பெறும் வெடிகுண்டு வெடிப்பது போன்ற அதிரடி காட்சிக்காக, அங்கிருந்த சிலிண்டரில் கேஸ் நிரப்பிக் கொண்டிருந்த போது அது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இந்த கோர விபத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருந்த நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி மதுரவாயலைச் சேர்ந்த மதன் என்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற மூவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்து வந்த ‘கில்லர்’ படப்பிடிப்பு தளத்தில் நடந்த இந்த விபத்தும் மரணமும், ஒட்டுமொத்த கோலிவுட் திரையுலகினரிடையே பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
