CINEMA
“என் பையன் ஜெர்மனியில இருக்கான்… ஆனா நான் கும்மிடிப்பூண்டி முதியோர் இல்லத்துல..! மூத்த நடிகரின் கண்ணீர் பேட்டி..!!
புனே திரைப்படக் கல்லூரியில் பயின்ற மோகன் சர்மா, தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராகவும், தயாரிப்பாளராகவும், திரைப்படத் துறை நிர்வாகியாகவும் திகழ்ந்தவர். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் சுமார் 170 திரைப்படங்களில் நடித்துள்ள இவர், 20 படங்களைத் தயாரித்துள்ளார். ‘சச்சின்’, ‘சலங்கை ஒலி’, ‘ஏணிப்படிகள்’ போன்ற திரைப்படங்களிலும், சின்னத்திரையில் ‘கோலங்கள்’ தொடரிலும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 2002-ல் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவராகவும், தேசிய திரைப்பட விருது தேர்வுக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றியவர். 2012-ல் இவர் இயக்கிய ‘நம்ம கிராமம்’ திரைப்படம் தமிழக மற்றும் கேரள அரசுகளின் விருதுகளைப் பெற்றதுடன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாராட்டையும் பெற்றது.
திரையுலகில் பெரும் முத்திரை பதித்த 80 வயதான மோகன் சர்மா, தற்போது கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் வசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அங்கு உணவும் தங்குமிடமும் கிடைத்தாலும், வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்கு மருந்து வாங்கக் கூடப் பணமின்றி கையில் ஒரு ரூபாயும் இல்லாமல் தவித்துள்ளார். ஃபிலிம் சேம்பரில் முதிய கலைஞர்களுக்கு உதவி வழங்கும் விதிமுறைகள் மாற்றப்பட்டதால், இவரால் அங்கிருந்தும் பலன் பெற முடியாமல் போனது. இச்செய்தியை அறிந்த நடிகர் ரஜினிகாந்த், அவரைத் தொடர்புகொண்டு வங்கி விவரங்களைப் பெற்று ரூ. 1 லட்சம் நிதியுதவி செய்து அவசரத் தேவைக்குக் கடவுள் போல உதவியுள்ளார்.
சாதி அடக்குமுறைக்கு எதிரான ‘நம்ம கிராமம்’ படத்தைத் தயாரிக்க வங்கிக் கடன் பெற்றும், சொத்துகளை விற்றும் பணத்தைச் செலவிட்டதால் இவர் பெருங்கடனில் மூழ்கினார். அக்கடனை அடைக்க உதவுவதாக உறுதியளித்த ஜெயலலிதா மறைந்ததால் கடன் பிரச்சனை தீரவில்லை. நடிகை லட்சுமியை விவாகரத்து செய்து சாந்தி என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்த இவருக்கு, மகன் ஜெர்மனியில் இருக்கிறார். தற்போது தனிமையில் வாடும் இவர், ‘நம்ம கிராமம்’ படத்தின் சேட்டிலைட் உரிமையை யாராவது வாங்கினால் மருத்துவச் செலவுகளுக்கு உதவியாக இருக்கும் என்றும், தமிழக முதல்வர் விஜயைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
