LATEST NEWS
அரசியல் மேடையில் அனல் பறக்கும் ‘விஜய் vs காஜல் பசுபதி’ சர்ச்சை…! இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ!
கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான விவகாரம் தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. இந்த துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குத் தமிழக முதல்வர் விஜய் சமீபத்தில் கருணை அடிப்படையில் அரசுப் பணிக்கான ஆணைகளை வழங்கினார். அந்த நிகழ்வில் பேசிய அவர், அன்றைய அசம்பாவிதத்திற்கு முந்தைய திமுக அரசும், காவல்துறையினரும் திட்டமிட்டு நடத்திய நாடகமே காரணம் என பகிரங்கமாக குற்றம் சாட்டினார். ஆபத்து நேரிடும் எனத் தெரிந்தே போலீசார் தங்களை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றதாக அவர் விமர்சித்தது இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் விஜய்யின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு நடிகை காஜல் பசுபதி கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். விபத்து தொடர்பான விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில், எவ்வித ஆதாரமும் இன்றி காவல்துறையினரையும், திமுகவையும் குறை கூறுவது ஏற்புடையதல்ல என அவர் வாதிட்டுள்ளார். மேலும், அன்றைய கூட்டத்திற்கு விஜய் தாமதமாக வந்ததே இந்த மாபெரும் கூட்ட நெரிசலுக்கும், உயிர் இழப்புகளுக்கும் முக்கியக் காரணம் எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், விபத்து நடந்தவுடன் பொறுப்பிலிருந்து நழுவி விஜய் ஏன் பயந்து அங்கிருந்து தப்பியோடினார் என்ற சரமாரியான கேள்வியையும் முன்வைத்துள்ளார். முன்னதாக போலீசாரை பாராட்டிவிட்டு தற்போது பழியை அவர்கள் மீது போடுவது நியாயமற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய்யின் தற்போதைய அரசியல் அணுகுமுறைகளையும் காஜல் பசுபதி கடுமையாக விமர்சித்துள்ளார். சட்டமன்றம் போன்ற மிகவும் கண்ணியமான மற்றும் பொறுப்பான இடங்களில், திரைப்படங்களைப் போல பாடல்களைப் பாடுவதும், உடல் அசைவுகள் மூலம் சைகை செய்து பேசுவதும் அரசியல் முதிர்ச்சியற்ற தன்மையைக் காட்டுவதாக அவர் சாடியுள்ளார். ஒரு முதலமைச்சருக்குரிய எந்தவொரு முதிர்ச்சியும் இல்லாமல், பொது மேடைகளிலும் சட்டசபையிலும் அவரது செயல்பாடுகள் மிகவும் குழந்தைத்தனமாக இருப்பதாகக் கூறி தனது அதிருப்தியை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
