LATEST NEWS
BREAKING: தாமிரபரணி ஆற்றில் டன் கணக்கில் கிடந்த கழிவுகள்.. நீதிபதிகள் வேதனை..!!
தாமிரபரணி ஆற்றில் கொட்டப்படும் அசுத்தங்கள் மற்றும் கழிவுகள் குறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். ஆற்றில் வெறும் 21 நாட்களில் சுமார் 90 டன் துணிகள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பிற கழிவுகள் அகற்றப்பட்டதாகக் கிடைத்த அதிர்ச்சியளிக்கும் தரவுகளைப் பார்த்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு தங்களின் மிகுந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. மதச் சடங்குகள் மற்றும் ஈமச்சடங்குகளின் பெயரால் இவ்வாறு நீர்நிலைகளை மாசுபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியர் தலையிட்டு, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஆற்றில் துணிகள் மற்றும் கழிவுகளைக் கொட்டும் இத்தகைய சடங்குப் பழக்கவழக்கங்களைத் தடுப்பது அல்லது ஒழுங்குபடுத்துவது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பிறகு ஜூலை 16-ஆம் தேதியன்று இறுதி உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
