LATEST NEWS
“டீச்சர் ஒரே போன் பேசுறாங்க, பாடம் நடத்தல..” கம்ப்ளைன்ட் செய்ய போலீஸை கூட்டிக்கொண்டு பள்ளிக்கு வந்த 7-ஆம் வகுப்பு மாணவன்.. “அடிச்சு மூளையை கழட்டிடுவேன்” என மிரட்டிய ஆசிரியர்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத் மாவட்டம், ராஜ்பூர் பகுதிக்கு உட்பட்ட ரஸ்தான் பகுதியில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் மாதவ் மிஸ்ரா என்ற மாணவன், பள்ளியில் சரியாகப் பாடம் நடத்தாததால் கோபமடைந்து காவல் நிலையத்திற்குச் சென்று புகாரளித்துள்ளான். பள்ளியில் ஆசிரியைகள் பாடம் நடத்துவதற்குப் பதிலாக, தங்களுக்குள் பேசிக் கொண்டும், மொபைல் போன்களைப் பயன்படுத்திக் கொண்டுமே நேரத்தைக் கழிப்பதாகவும், இதனால் மாணவர்கள் படிக்காமல் விளையாடிக் கொண்டிருப்பதாகவும் அந்த மாணவன் காவல்துறையினரிடம் குற்றம் சாட்டினான்.
மாணவனின் புகாரைக் கேட்ட காவல்துறையினர், அவனை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு நேரில் சென்றனர். காவல் துறையினர் முன்னிலையில் ஆசிரியையிடம் மாணவன் தனது மனக்குறையைக் கூறியபோது, “ஆசிரியை சைமா கான்” என்பவர் அந்த மாணவனைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். “உனக்கு என்ன பிரச்சனை என்றாலும் நேரடியாக என்னிடம் தான் கேட்க வேண்டும்” என்று ஆசிரியை கூற, அதற்கு அம்மாணவன் “நீங்கள் சொல்வதைக் கேட்பதே இல்லை” எனக் பதிலளித்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை, “அப்படியா கேட்கவில்லை? அடித்து உன்னைச் சரிசெய்து விடுவேன்” என்று காவல் துறையினரின் முன்னிலையிலேயே மாணவனை மிரட்டியுள்ளார்.
இச்சம்பவம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திங்கள்கிழமை நடந்துள்ளது. பள்ளிக்குக் காவல் துறையினர் வந்தபோது, ஆசிரியை மாணவனை மிரட்டிய இந்தக் காட்சி வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது. இச்சம்பவம் குறித்து கல்வித் துறை விசாரணை நடத்தி பள்ளி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
