LATEST NEWS
நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி.. மின்சார அதிர்ச்சியா? அதிகாரிகளின் அலட்சியமா..? நொய்டாவில் திறந்தவெளி வடிகாலில் விழுந்து இளம்பொறியாளர் உயிரிழந்த கொடூரம்..!!
நொய்டாவில் பெய்த பலத்த மழையின் போது, சாலையோரம் இருந்த திறந்தவெளி வடிகாலில் விழுந்து ஆர்யன் என்ற இளம் பொறியாளர் உயிரிழந்த சோகமான சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த வியாழக்கிழமை காலையில், நொய்டா செக்டர் 57 வழியாக அவர் தனது அலுவலகத்திற்குத் தேங்கியிருந்த மழ தண்ணீரில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது. சாலையோரம் வடிகாலை மூடியிருந்த சிமெண்ட் பலகை திடீரென சரிந்ததால் அவர் நிலைதடுமாறி சுமார் 3 அடி ஆழமுள்ள வடிகாலுக்குள் விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு முதலுதவி அளித்து உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இந்த விபத்து குறித்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், அங்குள்ள மின்கம்பத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகத் தேங்கியிருந்த தண்ணீரில் மின்சாரம் பரவியதாகவும், அது தாக்கியதாலேயே ஆர்யன் நிலைதடுமாறி வடிகாலில் விழுந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சியிலும், ஆர்யனைக் காப்பாற்ற ஓடிவந்த மற்றொரு நபர் மின்சார அதிர்ச்சியை உணர்ந்து உடனே பின்வாங்குவது பதிவாகியுள்ளது. இருப்பினும், இந்த விபத்துக்கு யார் பொறுப்பு என்பதில் நொய்டா நகர நிர்வாகத்திற்கும் மின்சாரத் துறைக்கும் இடையே தற்போது மோதல் வெடித்துள்ளது. மின்சாரத் துறை தனது அலட்சியத்தை மறுத்து, வடிகால் திறந்தே கிடந்ததுதான் விபத்துக்குக் முக்கிய காரணம் எனக் கூறுகிறது.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த ஆர்யனின் குடும்பத்தினர் மற்றும் உள்ளூர்வாசிகள், நொய்டா அதிகாரிகளின் கடுமையான அலட்சியமே இந்த உயிரிழப்புக்குக் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர். நகரம் முழுவதும் இது போன்ற பல திறந்தவெளி வடிகால்கள் எவ்விதப் பாதுகாப்பும் இன்றி ஆபத்தான முறையில் மூடப்படாமல் விடப்பட்டிருப்பது பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளதுடன், கடும் கண்டனங்களுக்கும் உள்ளாகியுள்ளது.
