LATEST NEWS
வேலி எல்லாம் போட்டாங்களே… அப்புறம் எப்படி..! லக்னோ-கான்பூர் விரைவுச்சாலையில் ரேஸ் ஓடிய குதிரை… 7 கி.மீ துரத்திச் சென்று மீட்ட NHAI குழு..!!
லக்னோ-கான்பூர் விரைவுச்சாலையில் குதிரை ஒன்று வாகனங்களுக்கு இடையே வேகமாக ஓடும் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உன்னாவ் பகுதியில் இந்த விரைவுச்சாலையில் நுழைந்த பழுப்பு நிற குதிரை ஒன்று, அதிவேகமாகச் செல்லும் வாகனங்களுக்கு இடையே பல கிலோமீட்டர் தூரம் ஓடியதால் அங்கு பெரும் பரபரப்பும், விபத்து அபாயமும் ஏற்பட்டது.
இதைக்கண்ட இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ரோந்துப் படையினர் தங்கள் ரோந்து வாகனத்தில் குதிரையைப் பின்தொடர்ந்து சென்றனர். வாகனத்தின் பின்புறத்தில் இருந்த ஊழியர் ஒருவர் நீண்ட கம்பைப் பயன்படுத்தி குதிரையைச் சாலையிலிருந்து வெளியேற்ற முயன்றார். ஆனால், குதிரை தொடர்ந்து ஓடியதால் சுமார் 7 முதல் 8 கிலோமீட்டர் தூரம் வரை அதைத் துரத்திச் சென்று, லால்ஹஞ்ச் பைபாஸுக்கு 2 கி.மீ முன்பாகச் சாலையிலிருந்து வெற்றிகரமாக வெளியேற்றினர்.
இந்தச் சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக பெரிய விபத்து ஏதும் ஏற்படவில்லை என்றாலும், விரைவுச்சாலையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. கால்நடைகள் உள்ளே நுழையாதவாறு 6 அடி உயர இரும்பு வலைகளும் வாயில்களும் அமைக்கப்பட்டிருந்தும், குதிரைகள் மற்றும் பிற விலங்குகள் எவ்வாறு சாலைக்குள் நுழைகின்றன என்றும், 24 மணி நேர ரோந்துப் பணி சரியாகச் செயல்படுகிறதா என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
