LATEST NEWS
அரசு வேலைக் கனவு நனவாகுமா…? ஒரே நாளில் 5,000 பணியாளர்கள் ஓய்வு … முதல்வர் விஜய்க்கு எழுந்துள்ள புதிய சவால்…. ஸ்தம்பித்த பணிகள்…!!
தமிழக அரசின் பல்வேறு துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றி வந்த ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் கடந்த மே 30-ஆம் தேதியன்று ஒரே நாளில் தங்களது பணிக்காலம் முடிந்து ஓய்வு பெற்றுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் மே வரையிலான காலகட்டத்தில் அதிகளவிலான ஊழியர்கள் ஓய்வு பெறுவது வழக்கம் என்றாலும், தற்போதைய புதிய ஓய்வுகளின் காரணமாகத் மாநில அரசுத் துறைகளில் நிலவி வரும் ஆள் பற்றாக்குறை மேலும் தீவிரமடைந்துள்ளது.
ஏற்கனவே கடந்த இருபது ஆண்டுகளில் பணியில் சேர்ந்த பலர் அடுத்தடுத்து ஓய்வு பெறவுள்ளதால் வரும் ஆண்டுகளிலும் இதே நிலை நீடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் ஓய்வுகளால் ஒட்டுமொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தற்போது ஐந்து லட்சத்தைக் கடந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மொத்தமுள்ள பணியிடங்களில் சுமார் 41 சதவீத இடங்கள் காலியாக இருப்பது வருவாய், பள்ளி கல்வி, காவல் மற்றும் சுகாதாரம் போன்ற பொதுமக்களோடு நேரடியாகத் தொடர்புடைய முக்கியத் துறைகளின் அன்றாடச் செயல்பாடுகளை முடக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது பல அலுவலகங்களில் இருக்கும் ஊழியர்கள் கூடுதல் பணிச்சுமையோடு வேலை செய்யும் அவல நிலை உருவாகியுள்ளது.
தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, தங்களது தேர்தல் வாக்குறுதியில் அரசுப் பணியிடங்கள் அனைத்தும் விரைந்து நிரப்பப்படும் என உறுதியளித்திருந்தது. இதனால், ஆசிரியர் மற்றும் மருத்துவப் பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு குரூப் தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எப்போது வெளியாகும் என்று வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
