LATEST NEWS
வேளாங்கண்ணிக்கு சென்ற குடும்பத்தினர்… துடிதுடித்து இறந்த மருத்துவ மாணவி… 5 பேர் படுகாயம்… கோர விபத்து…!!
சென்னை கேளம்பாக்கம் கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதியைச் சேர்ந்த அந்தோணிராஜ் (47) என்பவர், நேற்று முன்தினம் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் இரண்டு கார்களில் வேளாங்கண்ணி பேராலயத்திற்குப் வழிபாட்டிற்காகப் புறப்பட்டுள்ளார். இதில் அந்தோணிராஜ் உட்பட 6 பேர் பயணித்த ஒரு காரை அவருடைய உறவினர் சத்தியராஜ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.
கார் மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட கடலி என்ற பகுதியைச் கடந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மிக பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில் காரில் பயணித்த அந்தோணிராஜ், அவரது மனைவி சங்கீதா, மகள் ஹரிணி (20) மற்றும் உறவினர்கள் லிபியா ஜாய்சி, சத்தியராஜ், பிரேமா ஆகிய 6 பேரும் பலத்த காயமடைந்தனர். விபத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாகப் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு ஹரிணியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பலியான ஹரிணி சென்னையில் இரண்டாம் ஆண்டு மருத்துவப் படிப்பு (MBBS) படித்து வந்த மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. காயமடைந்த மற்றவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பெரம்பூர் காவல் ஆய்வாளர் மலைச்சாமி இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
