LATEST NEWS
வகுப்பறையில் 18 மாத குழந்தை…! தாயை இழந்து தம்பியை தூக்கி செல்லும் சிறுமி… மனதை உலுக்கும் கண்ணீர் கதை…!!
நேபாளத்தைச் சேர்ந்த 14 வயதான அஸ்மிதா தமங் என்ற சிறுமி, அங்குள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். மற்ற பிள்ளைகளைப் போலப் பள்ளிக்குச் சென்று மகிழ்ச்சியாகப் படிக்க வேண்டிய இந்தச் சின்ன வயதில், இவரது தாய் திடீரென மரணமடைந்ததால் ஒட்டுமொத்தக் குடும்பப் பொறுப்பும் இந்தச் சிறுமியின் தலைமேல் விழுந்துள்ளது. தந்தை வாழ்வாதாரத்திற்காக வேலைக்குச் சென்றுவிடுவதால், வீட்டில் உள்ள மூன்று உடன்பிறப்புகளைக் கவனிக்கும் கட்டாயத்திற்கு இவர் தள்ளப்பட்டுள்ளார். இதனால், தனக்குத் துணையாக யாரும் இல்லாத நிலையில், பிறந்து 18 மாதங்களே ஆன தனது குட்டித் தம்பியைத் தினமும் தோளில் சுமந்தபடியே பள்ளிக்கு அழைத்து வந்து, வகுப்பறையில் அமரவைத்துத் தனது கல்வியைத் தொடர்ந்து வருகிறார்.
வகுப்பறையில் சிறுமி குழந்தையுடன் அமர்ந்திருப்பதை அவரது பள்ளி ஆசிரியர் தற்செயலாகக் கண்டு விசாரித்தபோதுதான், இந்தச் சோகமான பின்னணி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பான நெகிழ்ச்சியான வீடியோ இணையதளங்களில் வெளியாகி தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. வறுமையிலும் படிப்பின் மீது அஸ்மிதா வைத்துள்ள அலாதிப் பற்றையும், துன்பத்தைத் தாங்கும் மனவலிமையையும் கண்டு வியந்து பாராட்டும் நெட்டிசன்கள், இந்தச் சிறுமிக்குத் தேவையான கல்வி உதவி மற்றும் பாதுகாப்பை நேபாள அரசும், சமூக நல அமைப்புகளும் உடனடியாக வழங்க முன்வர வேண்டும் என உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
