LATEST NEWS
“கொஞ்சம் டைம் கொடுங்க…” திருமணமான ஒரே வாரத்தில் சித்திரவதை…! கணவர் குடும்பத்தினரால் இளம்பெண் தற்கொலை… பெரும் சோகம்…!!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த சின்னமூக்கனூர் பகுதியைச் சேர்ந்த வல்லரசு என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தீபிகா (23) என்ற பெண்ணுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால், திருமணமான ஒரே வாரத்திலேயே கணவர் வல்லரசு, மாமனார் விநாயகம் மற்றும் மாமியார் சித்ரா ஆகிய மூவரும் சேர்ந்து கூடுதல் பணம் மற்றும் நகைகளைக் கேட்டு தீபிகாவைத் தொடர்ந்து வரதட்சணைக் கொடுமைக்கு உள்ளாக்கியதாகத் தெரிகிறது.
இதனால் மனவேதனையடைந்த தீபிகா, கடந்த ஒரு மாதமாகத் தனது பெற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார். அவரது பெற்றோரும் நகை, பணம் தருவதற்குக் கூடுதல் கால அவகாசம் கேட்டு வந்த நிலையில், கணவர் வீட்டாரின் தொடர் மன உளைச்சல் காரணமாகத் தீபிகா 3 நாட்களுக்கு முன்பு தனது தாய் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார்.
அபாய கட்டத்தில் இருந்த அவரை மீட்ட குடும்பத்தினர், உடனடியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காகக் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அனுமதித்தனர். அங்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி, நேற்று முன்தினம் தீபிகா பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தத் துயரச் சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். வரதட்சணைக் கொடுமை மற்றும் தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்திற்காகத் தீபிகாவின் கணவர் வல்லரசு, மாமனார் விநாயகம், மாமியார் சித்ரா ஆகிய 3 பேரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து, திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.
