CINEMA
பெண்களும் குழந்தைகளும் தான் தவெக-வின் பலமா?…5 வருடங்களுக்குப் பிறகு வரப்போகும் ‘அந்த’ மாற்றம்… இப்போதே அலறும் அரசியல் தலைவர்கள்…தமிழக அரசியலில் விஜய் நிகழ்த்திய நிஜ பிரளயம்…!
தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நிலவி வந்த திமுக – அதிமுக ஆகிய இரு துருவ அரசியலை உடைத்தெறிந்து, ஒற்றை ஆளாகப் புதியதொரு பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளார் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய். தேர்தல் என்றாலே இரு கழகங்கள் மட்டும்தான் என்ற நிலையை மாற்றி, தவெக-வை முதலிடத்திற்குக் கொண்டு வந்த பெருமைக்கு பின்னால் பெண்களும், குழந்தைகளும் அவர் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையே பிரதான காரணமாகும். விஜய் தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையிலிருந்தே இந்த அடித்தளத்தை மிகவும் திட்டமிட்டு அமைத்தார். இவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் வழிகாட்டுதலில் வெளியான ‘பூவே உனக்காக’, ‘நினைத்தேன் வந்தாய்’, ‘பிரியமானவளே’ போன்ற திரைப்படங்கள் மூலம் பெண்களின் நெஞ்சங்களில் தங்கள் வீட்டுப் பிள்ளையாகக் குடியேறினார்.
குடும்பங்கள் கொண்டாடும் ஹீரோவாக மாறிய விஜய், அடுத்த கட்டமாக எம்ஜிஆர் மற்றும் ரஜினியின் ஃபார்முலாவைப் பின்பற்றி கமர்ஷியல் ரூட்டிற்குத் தனது பயணத்தை மாற்றினார். ‘திருமலை’, ‘கில்லி’, ‘திருப்பாச்சி’, ‘போக்கிரி’, ‘மெர்சல்’ என வரிசையாகப் பட்டிதொட்டியெங்கும் மாஸ் ஹிட்டுகளைக் கொடுத்தார். இந்தத் திரைப்படங்களில் தங்கையைக் காக்கும் அண்ணனாக, சாமானியப் பக்கத்து வீட்டுப் பையனாக, சமூக அவலங்களைக் கண்டு கொந்தளிக்கும் இளைஞனாகத் தன்னை அவர் வெளிப்படுத்திய விதம் ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, மீசை தாடி வைத்த குழந்தையாகப் பாடல்களில் குழைவது, தனித்துவமான நடன அசைவுகள், பாடி லாங்குவேஜ் எனத் திட்டமிட்டு குழந்தைகளைக் காந்தம் போல் ஈர்த்தார். தனது அசுர மார்க்கெட் காலத்திலும்கூட, குழந்தைகளுக்காக மட்டுமே ‘புலி’ என்ற ஃபேண்டஸி திரைப்படத்தில் நடிக்கும் அளவிற்கு இந்த விஷயத்தில் அவர் மிகவும் தீர்க்கமாக இருந்தார்.
“விஜய் மாமாவுக்கு வாக்களிக்கச் சொல்லுங்கள்” எனத் தேர்தல் பரப்புரையின் போது விஜய் குழந்தைகளிடம் விடுத்த கோரிக்கையைக் கிண்டல் செய்தவர்கள், இன்று தேர்தல் முடிவுகளைப் பார்த்து மிரண்டு போயுள்ளனர். எம்ஜிஆருக்கு இருந்த செல்வாக்கிற்கும் மேலாக, ஐந்து வருடங்களுக்குப் பிறகு வாக்களிக்க வரவிருக்கும் முதற்தலைமுறை வாக்காளர்களின் மனதிலும் இப்போதே ஒரு ‘தேவதூதனாக’ விஜய் பிம்பம் பெற்றுள்ளார். திரைப்படங்கள் மூலமாகத் தான் விதைத்த நம்பிக்கையை இன்று அரசியல் அறுவடையாக மாற்றியுள்ளார் விஜய். எனினும், தன்னை நம்பிய பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஏமாற்றத்தைத் தராமல் தமிழ்நாட்டில் நிஜமான மாற்றத்தைக் கொண்டுவர வேண்டுமெனில், அவர் இதுவரை உழைத்ததை விடவும் அதிக நேர்மையுடனும், மிகுந்த நிதானத்துடனும், தெளிவுடனும் பயணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
