LATEST NEWS
போர் நிறுத்தம் தற்காலிகம் தான்…கச்சா எண்ணெய் விலை திடீர் வீழ்ச்சி…பதறும் உலக சந்தை… தங்கம் விலை என்னாச்சு?…வெள்ளிக்கிழமை வெளியாகப்போகும் ‘அந்த’ ஒரு அறிக்கை… உலகப் பொருளாதாரத்தையே மாற்றப்போகிறதா?…
சர்வதேசப் பொருளாதாரச் சூழலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய வர்த்தகச் சந்தையில் தங்கம் விலையானது இன்று (வியாழக்கிழமை) மீண்டும் ஏறுமுகப் பாதையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இஸ்ரேல் – லெபனான் இடையே தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் அறிவித்ததைத் தொடர்ந்து, உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்கள் தற்காலிகமாகத் தணியத் தொடங்கியுள்ளன. இதனால் பணவீக்கம் குறித்த அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் ஓரளவு குறைந்துள்ளது. அதேநேரம், நேற்று ஈரானிய ஏவுகணைகள் குவைத் மற்றும் பஹ்ரைன் மீது நடத்திய தாக்குதல்களும், அதற்குப் பதிலடியாக ஈரானின் கேஷ்ம் தீவு மீது அமெரிக்கா நடத்திய அதிரடித் தாக்குதல்களும் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதால், முதலீட்டாளர்கள் தற்போது மிகவும் எச்சரிக்கையுடனான முதலீட்டு உத்திகளைக் கையாண்டு வருகின்றனர்.
சர்வதேசச் சந்தையின் காலை நிலவரப்படி, ஸ்பாட் தங்கம் (Spot Gold) விலையானது 1 சதவீதம் வரை உயர்ந்து ஒரு அவுன்ஸ் 4,484.8 டாலராகவும், அமெரிக்கத் தங்க பியூச்சர்ஸ் வர்த்தகம் 0.7 விழுக்காடு அதிகரித்து ஒரு அவுன்ஸ் 4,486.84 டாலராகவும் வர்த்தகமாகி வருகிறது. நேற்று அமெரிக்க டாலரின் மதிப்பு கணிசமாக வலுவடைந்ததால் தங்கம் விலை ஒரே நாளில் 1 சதவீதத்திற்கும் மேல் சரிவைச் சந்தித்திருந்த நிலையில், இன்று டாலரின் அழுத்தத்தைக் கடந்து விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. உலகளாவிய சந்தையின் இந்த மாற்ற எதிரொலியாக, இந்தியப் பியூச்சர்ஸ் சந்தையிலும் (MCX) தங்கம் விலையானது 0.41 சதவீதம் உயர்ந்து 1,59,165 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
மறுபுறம், கடந்த மூன்று தினங்களாகத் தொடர்ச்சியான விலையேற்றத்தைச் சந்தித்து வந்த சர்வதேசக் கச்சா எண்ணெய் (Crude Oil) விலையானது இன்று வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சியால் எரிசக்தி செலவுகள் குறைந்து, பணவீக்கம் கட்டுக்குள் வரும் என்ற நம்பிக்கை வர்த்தகர்களிடையே ஏற்பட்டுள்ளது. இவற்றுக்கு இடையே, ஒட்டுமொத்த வர்த்தக உலகமும் அமெரிக்காவின் அடுத்தகட்டப் பொருளாதாரத் தரவுகள் மற்றும் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாகவிருக்கும் அதிகாரப்பூர்வ விவசாயம் அல்லாத வேலைவாய்ப்பு (Nonfarm payrolls) அறிக்கையை மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. நேற்று வெளியான ஏடிபி (ADP) தனியார் நிறுவன வேலைவாய்ப்புத் தரவுகளின்படி, அமெரிக்காவில் கடந்த மே மாதத்தில் மட்டும் புதிதாக 1,22,000 தனியார் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது பொருளாதார வல்லுநர்களின் கணிப்புகளை விட மிக அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
