LATEST NEWS
மண்டேலா, கடைக்குட்டி சிங்கம் பட நடிகையின் குடும்பத்திற்கு நேர்ந்த கொடூரம்…டீக்கடையில் நின்றிருந்த 70 வயது முதியவருக்கு அரிவாள் வெட்டு! பின்னணியில் இருக்கும் ‘கோயில்’ ரகசியம்
சின்னத்திரை மற்றும் ‘மாயாண்டி குடும்பத்தார்’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘டாக்டர்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து புகழ்பெற்றவர் தீபா. இவருடைய தந்தை புலவர் கணேசன் (70). இவர் தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் பஜாரில் உள்ள டீக்கடை ஒன்றின் அருகே நின்றுகொண்டிருந்தபோது, மோட்டார் பைக்கில் வந்த மர்ம கும்பல் ஒன்று அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டித் தள்ளியது. இந்தத் தாக்குதலைத் தடுக்க முயன்ற அருகில் இருந்த மற்றொரு நபருக்கும் கையில் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரையும் மீட்ட அங்கிருந்தவர்கள், சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட புலவர் கணேசன், தூத்துக்குடி மாநகர் 57-வது வார்டு காங்கிரஸ் தலைவராகவும், முத்தையாபுரம் பகுதியில் உள்ள பத்ரகாளி அம்மன் கோயில் தர்மகர்த்தாவாகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இக்கோயிலில் சிறப்பான நிர்வாகத்தை வழங்கி மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்ற அவர், தற்போது கோயில் அருகே பெருந்தலைவர் காமராஜருக்குச் சிலை அமைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்தச் சூழலில், கோயில் நிர்வாகம் மற்றும் காமராஜர் சிலை அமைப்பது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினருக்கும், புலவர் கணேசனுக்கும் இடையே கடந்த சில நாட்களாகக் கடுமையான முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த முன்விரோதத்தின் உச்சக்கட்டமாகவே இந்த கொடூரத் தாக்குதல் அரங்கேறியுள்ளது.
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பஜார் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முத்தையாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், இத்தாக்குதலில் தொடர்புடைய தூத்துக்குடி சக்தி நகரைச் சேர்ந்த பொன்ராஜ் (25), இசக்கி (22) மற்றும் கார்த்தி ஆகிய 3 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள மற்ற இருவரைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துத் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.
