LATEST NEWS
“அம்மா சாப்டீங்களா?” வீட்டுக்கு கிளம்புங்கமா – போலீஸ் வேனுக்குள் இருந்து கண்ணீருடன் தாய் நெஞ்சை உருக்கிய பீகார் மாணவன்.. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, பீகாரில் பல்வேறு மாணவர் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் மாணவர் பிரிவினர் அண்மையில் முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்தின் போது சில இடங்களில் கல்வீச்சு, பொதுச்சொத்துக்கள் சேதம் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் போன்ற வன்முறைச் சம்பவங்கள் வெடித்தன. இதில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட 91 போலீசாரும், 13 பொதுமக்களும் காயமடைந்தனர்; பல அரசு வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன.
இந்த வன்முறையைத் தொடர்ந்து பாட்னா காவல்துறை நடத்திய தீவிர அதிரடி சோதனையில் மாநிலம் முழுவதும் 694 பேர் வரை தடுத்து நிறுத்தப்பட்டனர். உரிய விசாரணை மற்றும் சரிபார்ப்பிற்குப் பிறகு, இவர்களில் 339 மாணவர்கள் மற்றும் மைனர்கள் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள 355 பேர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, ஜூலை 25 அன்று நள்ளிரவு 1 மணியளவில் கைது செய்யப்பட்ட மாணவர் ஒருவர் போலீஸ் வேனில் அடைக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வேனின் ஜன்னல் வழியே வெளியே நின்றிருந்த தன் தாயைப் பார்த்து, “அம்மா நீங்க சாப்பிட்டீங்களா? வீட்டுக்குக் கிளம்புங்க” என்று அவர் முதலில் அக்கறையுடன் கேட்கிறார். மேலும், தன் தாயார் கவலைப்படுவதைக் கண்டு, “ஒன்றும் பயப்படாதீங்கம்மா, எனக்கு எதுவும் ஆகாது” என்று வேனுக்குள்ளிருந்தே அவருக்குத் தைரியம் கூறும் நெகிழ்ச்சியான காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
