LATEST NEWS
வகுப்பறையா… ஓய்வு அறையா..? பெஞ்சில் கால் மேல் கால் போட்டுத் தூக்கம்… பள்ளியில் ஆசிரியர்கள் செய்த காரியத்தைப் பாருங்கள்..!!
பீகார் மாநிலம் சுபௌல் மாவட்டம், திரிவேணிகஞ்ச் பகுதியில் உள்ள கோரியா அரசு தொடக்கப் பள்ளியில், ஆசிரியர்கள் வகுப்பறையிலேயே பெஞ்சில் கால்களை நீட்டித் தூங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் தினேஷ் குமார் மண்டல் மற்றும் தேவேந்திர சர்தார் ஆகிய இரு ஆசிரியர்கள் இவ்வாறு தூங்குவது கண்டறியப்பட்டுள்ளது.
வகுப்பறையில் ஆசிரியர்கள் பொறுப்பற்ற முறையில் தூங்குவதைக் கண்ட மாணவர்கள், பாடம் எதுவும் படிக்க முடியாமல் தங்கள் பைகளை எடுத்துக்கொண்டு வீடுகளுக்குத் திரும்பினர். சுமார் 140 மாணவர்கள் சேர்க்கப்பட்டு, தினமும் 100 குழந்தைகள் வரை வரும் இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 7 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் ஆசிரியர்களின் இந்த அலட்சியப் போக்கு பெற்றோர்களிடையே கடும் கொந்தளிப்பையும், அரசுப் பள்ளிகளின் கல்வித்தரம் குறித்துக் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாகத் தகவலறிந்த கல்வித்துறை அதிகாரிகள், வைரல் வீடியோ குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். விசாரணையில் குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டால், துறை ரீதியான விதிகளின்படி சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
