LATEST NEWS
“பக்தர்களின் விருப்பத்திற்கு மாறாக எதுவும் நடக்காது…” திருச்செந்தூர் கோவில் கட்டண உயர்வு விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் அதிரடி விளக்கம்….!!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தங்கத்தேர், சண்முகர் அர்ச்சனை, மூலவர் அபிஷேகம் உள்ளிட்ட இருபதிற்கும் மேற்பட்ட ஆன்மிகச் சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்தும் திட்டம் தற்போதைக்கு வெறும் ஆலோசனைக் கட்டத்தில் மட்டுமே உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெளிவுபடுத்தியுள்ளார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட தற்போதைய கட்டண அமைப்பை, இன்றைய விலைவாசி உயர்வு மற்றும் நிர்வாகச் செலவினங்களைக் கருத்தில் கொண்டு மாற்றியமைக்க அறங்காவலர் குழு பரிந்துரைத்திருந்தது. இதன் அடிப்படையில், குறிப்பிட்ட சில முக்கிய வழிபாட்டுக் கட்டணங்களை பல மடங்கு உயர்த்த உத்தேசிக்கப்பட்டு, அதுகுறித்த அறிவிப்பு கடந்த ஜூன் 20-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்தக் கட்டண உயர்வு உத்தேசப் பட்டியல் ஆன்மிக அன்பர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அரசிடமிருந்து இந்த அதிகாரப்பூர்வ விளக்கம் வெளிவந்துள்ளது. பொதுமக்கள் மற்றும் முருக பக்தர்கள் தங்களின் சாதக பாதகமான கருத்துகளையும் ஆட்சேபனைகளையும் வரும் ஜூலை 7-ஆம் தேதி மாலைக்குள் கோவில் இணை ஆணையருக்குத் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்களின் ஒருமித்த விருப்பத்திற்கும் முடிவிற்கும் மாறாக இந்த விவகாரத்தில் அறநிலையத்துறை எதேச்சதிகாரமாக எந்தவொரு இறுதி முடிவையும் எடுக்காது என்றும், பக்தர்களின் நலனே முதன்மையானது என்றும் அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பில் திட்டவட்டமாக உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
