LATEST NEWS
“சொகுசு வாழ்க்கை…” 29 வயதில் லட்சக்கணக்கில் வாரி சுருட்டிய மோசடி இளம்பெண்…. கேரளாவை உலுக்கிய பகீர் சம்பவம்…!!
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா பகுதியைச் சேர்ந்த 29 வயதான ஷம்லா என்ற பெண், சமூக வலைத்தளங்கள் மூலம் வசதியான வாலிபர்களைக் குறிவைத்துத் திருமண மோசடியில் ஈடுபட்டு வந்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெரும்பாவூர் மஞ்சப்பட்டி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் முகநூல் மற்றும் தொலைபேசி வாயிலாகப் பழகிய இப்பெண், அவரைக் காதலிப்பதாகக் கூறித் திருமணம் செய்து கொள்வதாகவும், தனது தொழிலில் பங்குதாரராகச் சேர்ப்பதாகவும் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
இதனை நம்பிய அந்த வாலிபர், கடந்த 2024-ஆம் ஆண்டில் பல தவணைகளாக மொத்தம் 50 லட்சம் ரூபாயை ஆன்லைன் மூலமாக ஷம்லாவின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்டவுடன் தனது பேச்சை மாற்றிய அந்தப் பெண், வாலிபரைத் திருமணம் செய்ய மறுத்ததுடன் பணத்தைத் திருப்பித் தராமல் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் அடிப்படையில் பெரும்பாவூர் காவல் ஆய்வாளர் அனில் குமார் தலைமையிலான போலீசார் டிஜிட்டல் ஆதாரங்களுடன் ஷம்லாவை அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய அடுத்தகட்ட விசாரணையில், கேரளா முழுவதும் பல மாவட்டங்களில் இதே பாணியில் அவர் கோடிக்கணக்கான ரூபாய் சுருட்டியிருப்பது அம்பலமாகியுள்ளது.
குறிப்பாக, கோதமங்கலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் 20 லட்சம் ரூபாயும், ஆலுவாவைச் சேர்ந்த மற்றொரு நபரிடம் 11 லட்சம் ரூபாயும் ஏமாற்றியுள்ளதாகப் போலீசார் கண்டறிந்துள்ளனர். ஏமாற்றிய பணத்தைக் கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த இவருக்குப் பின்னால் ஏதேனும் பெரிய மோசடி கும்பல் உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறை அதிகாரிகள் தற்போது தீவிரமாகப் புலனாய்வு செய்து வருகின்றனர்.
