LATEST NEWS
“அதிக குழந்தை பெத்துக்கோங்க!” – இளம்தம்பதியினருக்கு அமைச்சர் அருண்ராஜ் விடுத்த அதிரடி கோரிக்கை..!
தமிழகத்தில் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதால், தம்பதியினர் அதிகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள முன்வர வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற விழிப்புணர்வுக் கருத்தரங்கில் பேசிய அவர், மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் பொருளாதாரக் காரணங்களால் மக்கள் ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொள்வது அதிகரித்துள்ளதாகவும், இது எதிர்காலத்தில் மக்கள் தொகை சமநிலையைப் பாதிக்கும் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.
மாநிலத்தின் மக்கள் தொகை தரவுகளைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், கடந்த 2017-ஆம் ஆண்டில் 65.8 சதவீதமாக இருந்த பிறப்பு விகிதம், தற்போது 52 சதவீதமாகக் கணிசமாகக் குறைந்துள்ளது என்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். அதேபோல், ஒரு பெண் தனது வாழ்நாளில் பெற்றெடுக்கும் சராசரிக் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறிக்கும் கருவுறுதல் விகிதமும் 2.1 என்ற அளவில் இருந்து 1.4 ஆகக் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய பிறப்பு விகிதச் சரிவைத் தடுத்து, மக்கள் தொகையை மீண்டும் அதிகரிக்கச் செய்யும் நோக்கில், தமிழக அரசு சார்பில் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் விளக்கியுள்ளார். தம்பதியினரை ஊக்குவிக்கவும், பிரசவக் காலப் பராமரிப்பை மேம்படுத்தவும் இந்தத் திட்டம் உதவும் எனக் கூறிய அவர், ஆரோக்கியமான எதிர்காலத் தமிழகத்தை உருவாக்க இளம்தம்பதியினர் அதிகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
