LATEST NEWS
“அப்போ எங்கே போனது உங்க சமூக நீதி..?!” முந்தைய திமுக ஆட்சிக் ரகசியங்களை அம்பலப்படுத்திய காங்கிரஸ் பொருளாளர்… தமிழக அரசியலில் பெரும் பூகம்பம்..!!!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ரூபி ஆர். மனோகரன் வெளியிட்டுள்ள காரசாரமான அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனைப் பற்றி விமர்சிக்கவும், அதன் பெயரை மாற்றச் சொல்லவும் திமுகவிற்கு என்ன தகுதி இருக்கிறது என்று மிகக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். திமுக சட்டமன்ற உறுப்பினர் இ. பரந்தாமனின் விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்துள்ள அவர், தேர்தல் தோல்வி பயத்திலும் விரக்தியின் உச்சத்திலும் திமுகவினர் இவ்வாறு பிதற்றி வருவதாகச் சாடியுள்ளார். முந்தைய திமுக ஆட்சிக் காலங்களில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தாக்கல் செய்த கொள்கை விளக்கக் குறிப்புகளில் நேரு, அம்பேத்கர் பெயர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டிருந்ததாகக் கூறி, “அப்போது எங்கே போனது உங்கள் சமூக நீதி?” என்று அவர் திமுகவை நோக்கி வினவியுள்ளார்.
மேலும், தேர்தல் லாபத்திற்காகவும் கபட நாடகத்திற்காகவும் மட்டுமே தற்போது அமைச்சர் மெய்யநாதன் மூலமாக அந்தப் பெயர்கள் கொள்கை விளக்கக் குறிப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக ரூபி மனோகரன் குற்றம்சாட்டியுள்ளார். அன்று நேருவையும் அம்பேத்கரையும் வசதியாக மறந்துவிட்டு, இன்று தேர்தல் தோல்வி பயத்தில் நாடகமாடும் அறிவாலயத்தின் பெயரை முதலில் என்னவென்று மாற்றப் போகிறீர்கள் என்று அவர் ஆக்ரோஷமாகச் சவால் விடுத்துள்ளார். மக்கள் வழங்கிய புதிய அரசியல் மாற்றத்தை ஜீரணிக்க முடியாமல் திமுக ஆடும் இந்த மலிவான அரசியல் நாடகம் இனிமேல் எடுபடாது என்றும் அவர் தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
