LATEST NEWS
“என் மகன் கீழேதான் நின்னான்… ரூ.1 கோடி பிளாட் லட்சணம் இதுதானா..?” பில்டரை வெளுத்து வாங்கிய பெண்… நோய்டா ஹை-ரைஸ் அப்பார்ட்மெண்ட்டில் நடந்த பகீர் சம்பவம்..!!
நோய்டாவில் உள்ள கவுர் சிட்டி 1ஸ்ட் அவென்யூ அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் அக்சிதா பன்சால் என்ற பெண், தனது வீட்டின் மேற்கூரையின் பூச்சு திடீரென உடைந்து கீழே விழுந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த சம்பவம் நடந்தபோது, அவருடைய மகன் சரியாக அந்த மேற்கூரைக்குக் கீழே நின்றுகொண்டிருந்துள்ளான். நல்வாய்ப்பாக சிறுவன் காயங்களின்றி தப்பியபோதிலும், உடைந்த கட்டிடக் கழிவுகள் கட்டிலிலும் தரையிலும் சிதறி விழுந்தன. எவ்வித முன் அறிகுறியோ அல்லது விரிசலோ இன்றி திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது அந்த குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது முற்றிலும் பில்டரின் தரமற்ற மற்றும் மோசமான கட்டுமானப் பணியால் மட்டுமே நடந்துள்ளது என்று அக்சிதா குற்றம் சாட்டியுள்ளார். அந்த வீடியோவில், கீழே விழுந்த இடிபாடுகளைத் தனது கைகளில் எடுத்து எளிதாகப் பொடித்துக் காட்டும் அவர், பில்டர் எந்த அளவுக்குத் தரம் குறைந்த பொருள்களைப் பயன்படுத்தியுள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். மேலும், இந்த விவகாரம் குறித்து பில்டரிடம் முறையிட்டபோது, அவர்கள் “சரி, பார்க்கலாம், செய்கிறோம்” என்று மிகவும் அலட்சியமான பதிலையே வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
https://www.instagram.com/reel/DbtU2QYvU1x/?utm_source=ig_web_button_share_sheet
சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த பிளாட்டில் இதுபோன்ற சம்பவம் நடந்தது குறித்து கேள்வி எழுப்பியுள்ள அப்பெண், தங்களைப் போன்ற குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு குறித்து மிகுந்த கவலை தெரிவித்துள்ளார். எவ்வித எச்சரிக்கையும் இன்றி இவ்வாறு மேற்கூரை இடிந்து விழுந்து தனது குழந்தைக்கோ அல்லது குடும்பத்தினருக்கோ ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டிருந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பார்கள் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், இதுபோன்ற ஆடம்பரக் குடியிருப்புகளின் மோசமான கட்டுமானத் தரத்தைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
