LATEST NEWS
“டிரைவர் வரலன்னு காரை கொடுத்தேன்…” குழந்தையுடன் சென்ற கார் மீது மோதிய 15 வயது சிறுவன்… விபத்து பண்ணிய மகனை நியாயப்படுத்திய தாயாரை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்..!!
நோய்டாவில் 15 வயது சிறுவன் ஒருவன் காரை ஓட்டிச் சென்று மற்றொரு காரின் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்குள்ளான அந்த மற்றொரு காரில் ஒரு குழந்தை இருந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை, ஆனால் கார் பலத்த சேதமடைந்தது. விபத்தை ஏற்படுத்திய பின் அந்தச் சிறுவன் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது, அங்கு இருந்த பொதுமக்கள் அவனை மடக்கிப் பிடித்து தடுத்து நிறுத்தினர்.
இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், பாதிக்கப்பட்ட காரின் உரிமையாளர் சிறுவனிடம் பேசும்போது, “நீ ஒரு சிறுவன், அதனால் நான் உன்னிடம் எதுவும் பேசவில்லை” என்று கூறி, அவனது தாயாரிடம் உரிமம் இல்லாத சிறுவனை எவ்வாறு கார் ஓட்ட அனுமதிக்கலாம் என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு அந்தத் தாய், வழக்கமாக கார் ஓட்டும் ஓட்டுநர் அன்று வராததால், வேறு வழியின்றி அவசரமாக ஒருவரை அழைத்து வரத் தன் மகனை கார் ஓட்ட அனுமதித்ததாகக் கூறி தனது செயலை நியாயப்படுத்த முயன்றார்.
மைனர் சிறுவனுக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதைத் தாயாரும் சிறுவனும் ஒப்புக்கொண்ட நிலையில், தாயாரின் பொறுப்பற்ற பதிலும் நியாயப்படுத்துதலும் இணையவாசிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளப் பயனர்கள், “இவருக்கு ஒரு நல்ல அறை கொடுக்க வேண்டும்” என்றும், ஓட்டுநர் உரிமம் இல்லாத சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
