LATEST NEWS
ஒரே ஒரு OTP… காணாமல் போன பெங்களூரு மாணவி கர்ப்பமாக மீட்பு… சிஐடி போலீசாரின் அதிரடி டிஜிட்டல் ஆபரேஷன்..!!
பெங்களூரு வித்யாரண்யபுரா பகுதியைச் சேர்ந்த 18 வயதான இரண்டாம் ஆண்டு பியூசி மாணவி ஒருவர், கடந்த ஜனவரி 31-ஆம் தேதி கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். அவருடன் அவரது தோழியான மற்றொரு சிறுமியும் மர்மமான முறையில் மாயமானார். இவர்கள் இருவரும் தங்களது கைபேசிகள் மற்றும் உடைமைகளை வீட்டிலேயே விட்டுவிட்டு, கல்லூரி பைகள் மற்றும் ஆதார் அட்டைகளை மட்டுமே எடுத்துச் சென்றிருந்தனர். பெங்களூரிலிருந்து புறப்பட்டு மலை மகதேஸ்வரா மலைப்பகுதிக்குச் சென்ற பிறகு இருவரும் தனித்தனியாகப் பிரிந்து சென்றனர். பல மாதங்களாகியும் மகளைக் கண்டுபிடிக்க முடியாததால், அவரது பெற்றோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். இதன் பேரில் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கு மாநில குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டது.
சுமார் 7 மாதங்களாக எவ்வித தடயமும் கிடைக்காமல் இருந்த நிலையில், வழக்கில் ஒரு முக்கிய டிஜிட்டல் திருப்பம் ஏற்பட்டது. அந்த 18 வயது மாணவி ஏதோ ஒரு சேவைக்காகத் தனது ஆதார் எண்ணைப் பயன்படுத்தியபோது, அதற்குரிய ஒருமுறை கடவுச்சொல்லைப் பெறத் தனது கணவரின் மொபைல் எண்ணைப் பதிவு செய்தார். இந்த ஆதார் டிஜிட்டல் தடத்தைக் கண்டறிந்த சிஐடி சிறப்புப் படை அதிகாரிகள், உடனடியாக அந்த மொபைல் எண்ணைக் கண்காணித்து அதன் உரிமையாளரின் இருப்பிடத்தைக் கண்டறிந்தனர்.
அவ்வாறு மொபைல் எண்ணைக் கொண்டு விசாரணை நடத்தியதில், அந்த நபர் கனகபுரா தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும், மாயமான மாணவி அவரைத் திருமணம் செய்து கொண்டு அங்கேயே வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. மேலும், மீட்கப்பட்ட மாணவி தற்போது கர்ப்பமாக இருப்பதாகச் மூத்த சிஐடி அதிகாரி தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாணவியைப் பத்திரமாக மீட்ட சிஐடி போலீசார், அவரைக் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெற்றோர் வசம் ஒப்படைத்தனர். அதே வேளையில், அவருடன் மாயமான மற்றொரு சிறுமியைத் தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.
