CRIME
“என் புகாரை வாங்க மாட்டியா… உன்னைக் கொன்றுவிடுவேன்…!” பெங்களூரு காவல் நிலையத்திற்குள் புகுந்து.. கர்ப்பிணி பெண் காவலரை இரும்பு கம்பியால் தாக்கிய கொடூரன்..!!
பெங்களூரு மெஜஸ்டிக் ரயில்வே காவல் நிலையத்தில், அதிகாலை வேளையில் கர்ப்பிணி பெண் காவலர் ஒருவர் இரும்பு கம்பியால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளானவர் 28 வயதான டி. சில்பா என்ற பெண் காவலர் ஆவார். இரண்டு மாத கர்ப்பிணியான இவர், சம்பவத்தன்று இரவுப் பணியில் இருந்தபோது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
ஆகஸ்ட் 26 ஆம் தேதி அதிகாலை சுமார் 4 முதல் 5 மணி அளவில், கஜேந்திரா என்பவர் தனது தொலைந்த மொபைல் போன் குறித்து புகார் அளிப்பதற்காக காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது நிலையத்தில் பணியில் இருந்த காவலர் சில்பா, புகார் பதிவு செய்யும் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் அப்போது அங்கு இல்லை என்றும், காலையில் வந்து புகார் அளிக்குமாறும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் அங்கிருந்து சென்று, சிறிது நேரத்திலேயே தடுப்புக் கம்பியில் (barricade) இருந்த இரும்பு கம்பியை எடுத்துக்கொண்டு மீண்டும் வந்துள்ளார்.
காவல் நிலையத்திற்குள் அமர்ந்திருந்த பெண் காவலர் சில்பாவை, அந்த நபர் இரும்பு கம்பியால் தலையில் 7 முதல் 8 முறை கொடூரமாகத் தாக்கியுள்ளார். “என் புகாரை ஏன் வாங்க மறுக்கிறாய்? வேலையைச் செய்யாவிட்டால் உன்னைக் கொன்றுவிடுவேன்” என்று இந்தியில் கத்திக்கொண்டே அவர் இத்தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. சத்தம் கேட்டு ஓடிவந்த சக காவலர்கள், படுகாயமடைந்த சில்பாவை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தலையில் படுகாயமடைந்த அவருக்கு 23 தையல்கள் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ரயில்வே போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட கஜேந்திராவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
