LATEST NEWS
“கடவுளே… நாளைக்கு நாள் நல்லபடியா முடியணும்… 3 வருஷம் வேலை பார்த்தும் ஓயாத எக்ஸாம் பயம்..!” கார்ப்பரேட் வாழ்க்கையை ‘சம்பளம் தர்ற ஸ்கூல்’ என வர்ணித்து உண்மைகளைப் போட்டுடைத்த பெண்ணின் வைரல் வீடியோ..!!
கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிவது வெளியே இருப்பவர்களுக்கு ஒரு கனவு வேலையாகத் தோன்றினாலும், உள்ளே வேலை செய்பவர்களுக்கு மட்டுமே அதில் உள்ள உண்மையான கஷ்டங்களும் சவால்களும் தெரியும். இந்த நிலையில், பெங்களூரைச் சேர்ந்த சாரு குப்தா என்ற பெண், கார்ப்பரேட் வாழ்க்கையின் நிஜ நிலையை விளக்கி வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. கார்ப்பரேட் துறையில் 3 ஆண்டுகள் அனுபவம் கொண்ட அவர், கார்ப்பரேட் வாழ்க்கையை “சம்பளம் கிடைக்கும் பள்ளி வாழ்க்கை” என்று வர்ணித்து, அதற்குப் பின்னால் உள்ள காரணங்களையும் சுவாரசியமாகப் பகிர்ந்துள்ளார்.
தான் தினமும் சந்திக்கும் பணிச் சுமைகளைப் பற்றிப் பேசிய சாரு குப்தா, “எனக்கு கார்ப்பரேட் துறையில் 3 ஆண்டுகள் அனுபவம் இருந்தபோதிலும், இன்றளவும் நான் ஏதோ பள்ளியில் தேர்வு எழுதுவது போன்ற உணர்வையே எதிர்கொள்கிறேன். இன்றைய நாள் எப்படியாவது முடிந்துவிட்டால் போதும், வீட்டிற்குச் சென்று நாளைக்கான வேலைகளை இன்னும் சிறப்பாகத் திட்டமிட்டுத் தயார் செய்து கொள்ளலாம் என்ற எண்ணமே தினமும் எழுகிறது. பள்ளிக் காலத்தில் நிலுவையில் இருக்கும் அசைன்மென்ட்களைப் போல, தினமும் ஏராளமான பணிகள் நிலுவையில் இருக்கின்றன. வார இறுதி நாளான சனிக்கிழமைகளிலும் கூட இந்த வேலைகளைப் பற்றிய பயமும் மன அழுத்தமும் மூளையை உலுக்கிக் கொண்டே இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
https://www.instagram.com/reel/Dcnqg-rue2x/?utm_source=ig_web_button_share_sheet
மேலும் தொடர்ந்த அவர், “ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தவுடன் தான் நிலுவையில் உள்ள அனைத்துக் கோப்புகளையும் திறந்து வைத்து அவசர அவசரமாக முக்கியமான வேலைகளைச் செய்யத் தொடங்குவேன். அப்போது ‘கடவுளே, இன்றைய நாளையாவது எந்தப் பிரச்சினையும் இல்லாமல் கடக்க வை’ என்று வேண்டிக் கொள்வேன். இது அப்படியே பள்ளிப் பருவத்துத் தேர்வு அழுத்தத்தையே நினைவூட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார். இவரது இந்த வீடியோவை பார்த்த பல கார்ப்பரேட் ஊழியர்களும், மேலாளர்களும் கூட தங்களுக்கும் இதே போன்ற உணர்வுதான் ஏற்படுகிறது என்று கருத்து தெரிவித்து சாரு குப்தாவின் கூற்றை ஆமோதித்து வருகின்றனர்.
