LATEST NEWS
ரூ.5 கோடி எங்க இருந்து வந்துச்சு..? சம்பாதிச்சத காப்பாத்திக்க வேண்டாமா..? அண்ணாமலையை பிரித்து மேய்ந்த எஸ்.வி.சேகர்… தொண்டர்கள் அதிர்ச்சி
அண்ணாமலையின் அரசியல் நகர்வுகள் குறித்து பாஜகவின் முன்னாள் பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் மீண்டும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகியதாகக் கூறப்பட்ட சூழலில், அவர் தானாக விலகவில்லை என்றும், பாஜக தலைமையால் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார் என்றும் எஸ்.வி.சேகர் ஏற்கெனவே கூறியிருந்த கருத்துகள் தற்போது மீண்டும் அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளன.
முன்னதாக அண்ணாமலையின் தலைமையை கடுமையாக எதிர்த்து வந்த எஸ்.வி.சேகர், அண்ணாமலைக்கு தன்னுடன் இருப்பவர்களை அரவணைத்துச் செல்லும் எண்ணம் இல்லை என சாடியிருந்தார். போருக்குச் செல்லும்போது மற்றவர்களை தாக்குவதற்குப் பதிலாக, கூட இருப்பவர்களையே தாக்கும் போக்கை அவர் கொண்டிருப்பதாகவும், எதிர்காலத்தில் அவர் காங்கிரஸ் கட்சியில் இணையவே வாய்ப்புள்ளது என்றும் எஸ்.வி.சேகர் கடந்த காலத்தில் கணித்திருந்தார்.
தற்போது தான் எந்தக் கட்சியிலும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ள எஸ்.வி.சேகர், 2013-ல் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரிலேயே பாஜகவில் இணைந்ததாகக் குறிப்பிட்டார். தேர்தலில் போட்டியிடாமல் பிரச்சாரம் மட்டும் செய்வதாகத் தெரிவித்திருந்த நிலையில், அண்ணாமலை மாநில தலைவரான பிறகு தன்னை கட்சியில் பேசவிடாமல் தடுத்ததாக அவர் குற்றம்சாட்டினார்.
தன்னை பாஜகவில் இருந்து நீக்குவதற்காக அண்ணாமலை ஐந்து முறை டெல்லி வரை சென்று முயற்சி செய்தார் என்றும், ஆனால் இறுதியில் அண்ணாமலையே கட்சியிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டதாகவும் எஸ்.வி.சேகர் எள்ளலாகத் தெரிவித்தார். இருப்பினும், நாட்டின் பிரதமரான நரேந்திர மோடிக்கு தங்களின் ஆதரவு என்றும் தொடரும் என அவர் மீண்டும் உறுதிபடக் கூறினார்.
மேலும் அண்ணாமலையின் சமூக நலச் செயல்பாடுகளையும் எஸ்.வி.சேகர் கேள்விகட்கு உட்படுத்தியுள்ளார். மரக்கன்றுகள் நடுவதை வைத்து கட்சி ஆரம்பிப்பதையும், மெரினா கடற்கரையில் 50 டன் குப்பைகளை அகற்ற ரூ.5 கோடி வரை செலவு செய்ததாகக் கூறுவதையும் சுட்டிக்காட்டிய அவர், இவ்வளவு பெரிய தொகை அவருக்கு எங்கிருந்து வந்தது என்றும், ஈட்டிய பணத்தைப் பாதுகாத்துக் கொள்ளவே இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சாடியுள்ளார்.
