LATEST NEWS
“சாட்ஜிபிடி மூலம் போலி நீட் வினாத்தாள் தயாரிப்பு…” இன்ஸ்டாகிராமில் கல்லா கட்டிய சட்டக்கல்லூரி மாணவர்…. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!
முறைகேடு புகார்களால் ரத்து செய்யப்பட்டு அண்மையில் மீண்டும் நடத்தப்பட்ட நீட் மறுதேர்வில், பல்வேறு முறைகேடு முயற்சிகள் முறியடிக்கப்பட்டுப் பல தீவிர கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பீகார் மாநிலத்தில் நடைபெற்ற தேர்வின் போது, கைரேகை உள்ளிட்ட ‘பயோமெட்ரிக்’ சரிபார்ப்புப் பணியில் போலி தேர்வர்களுடன் கூட்டு சேர்ந்து அலட்சியமாகச் செயல்பட்ட 18 ஊழியர்கள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.
மேலும், லக்கிசாரை பகுதியில் உண்மையான மாணவர்களுக்குப் பதிலாக ஆள்மாறாட்டம் செய்து பரீட்சை எழுதிய 9 நபர்கள் பிடிபட்டதுடன், கயா மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த அங்கித் ராஜ் என்ற முக்கிய இடைத்தரகரும் போலீசாரால் சிறையிலடைக்கப்பட்டார். இதற்கிடையில், மத்திய பிரதேசத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமான ‘சாட்ஜிபிடி’ உதவியுடன் போலியான நீட் வினாத்தாள்களைத் தயாரித்து மோசடி செய்த ஒரு சட்டக்கல்லூரி மாணவர் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் வழியாக இந்த போலியான தாள்களை ஒரு பிரதி 50 முதல் 100 ரூபாய் வரை என விற்று, சுமார் 20 மாணவர்களை ஏமாற்றி 30,000 ரூபாய் வரை அவர் வருவாய் ஈட்டியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட நபர்கள் அளித்த புகாரின் பேரில் போபாலில் கைது செய்யப்பட்டுள்ள அந்த நபரிடம், இந்த வினாத்தாள் மோசடிப் பின்னணி குறித்துக் காவல் துறையினர் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
