CINEMA
ஹோட்டலில் நடந்த அந்த ஒரு கண்ணசைவு…இன்ஸ்டாகிராம் வருவதற்கு முன்பே தொடங்கிய காதல்…15 வருட ரகசியம் உடைந்தது… கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி தட்டில் காதலின் பின்னணியில் உள்ள ஆச்சரியமூட்டும் கதை…!
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி எனப் பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் தனது காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்த சுவாரசியமான பல ரகசியங்களை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டிலை இவர் கரம்பிடித்தார். இன்ஸ்டாகிராம் போன்ற நவீன சமூக ஊடகங்கள் உருவாவதற்கு முன்பே, ‘ஆர்குட்’ (Orkut) தளத்தின் மூலம் இவர்களது நட்பு தொடங்கியுள்ளது. சுமார் ஒரு மாத காலம் இணையத்தில் மட்டுமே உரையாடி வந்த இந்த ஜோடி, முதன்முதலாக ஒரு ஹோட்டலில் தற்செயலாகச் சந்தித்துக் கொண்டதாகவும், குடும்பத்தினர் உடன் இருந்ததால் கீர்த்தி வெறும் கண்ணசைவோடு மட்டுமே கடந்து செல்ல நேரிட்டதாகவும் சிரிப்புடன் நினைவுகூர்ந்துள்ளார்.
இவர்களது காதல் பயணம் சவால்களும் சுவாரசியங்களும் நிறைந்ததாக இருந்துள்ளது. கீர்த்தி சுரேஷ் விடுத்த சவாலை ஏற்று, கடந்த 2010 ஆம் ஆண்டு ஆண்டனி தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், இந்தத் தம்பதியினர் தங்களது காதலை அதிகாரப்பூர்வமாக உலகிற்கு அறிவிக்க கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆகியுள்ளது. காதலின் அடையாளமாக ஆண்டனி பரிசளித்த மோதிரத்தை கீர்த்தி இதுவரை தனது கையை விட்டு கழற்றியதே இல்லை என்றும், தனது பல திரைப்படங்களில் கூட அந்த மோதிரத்துடனேயே நடித்திருப்பதாகவும் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார்.
தன்னை விட 7 வயது மூத்தவரான ஆண்டனி, தொடக்கத்தில் கத்தாரில் சுமார் 6 ஆண்டுகள் பணியாற்றியதால், தங்களால் நேரில் சந்திக்க முடியாமல் போனதாக கீர்த்தி விவரித்துள்ளார். ஒருகட்டத்தில், வீட்டில் காதலை ஏற்றுக்கொள்ள மாட்டார்களோ என்ற அச்சத்தில் இருவரும் வீட்டை விட்டு ஓடிப்போகக்கூட திட்டம் தீட்டியதாகக் கூறும் அவர், கொரோனா ஊரடங்கு காலமே தங்களது காதலை மேலும் பலப்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார். “ஆண்டனிக்கு என்னை மாதிரி ஒரு பெண் கிடைத்தது அதிர்ஷ்டம் என்று பலரும் கூறினாலும், உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அவரை கணவராக அடைய நான் தான் கொடுத்து வைத்தவள்” என்று தன் கணவர் மீதான அளவற்ற காதலை கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியுள்ளார்.
