CINEMA
ஐயோ என்னால தாங்க முடியல..! திரையுலகை சோகத்தில் ஆழ்த்திய எஸ்.ஜானகியின் மரணம்!…இளையராஜா வெளியிட்ட உருக்கமான வீடியோ…!!
தென்னிந்தியாவின் இசைக்குயிலாகப் போற்றப்படும் பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி அவர்கள், தனது 88-வது வயதில் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் மைசூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இயற்கை எய்தினார். பல தசாப்தங்களாகத் தனது தேன் சிந்தும் குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கட்டிப்போட்டிருந்த இவரது மறைவு, ஒட்டுமொத்தத் திரையுலகையும் பெருஞ்சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரைத்துறையினரும், பொதுமக்களும் இசைப் பேரரசியின் பிரிவுக்குத் தங்கள் கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.
அவருடன் இணைந்து பல காலத்தாலும் அழியாத இசை காவியங்களைப் படைத்த இசைஞானி இளையராஜா, இந்த இழப்பைக் கேட்டுப் பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், உலகப் புகழ் பெற்ற பல இசை மேதைகளின் தனிப்பட்ட வாழ்க்கை எப்படிச் சோகங்கள் நிறைந்து காணப்படுகிறதோ, அதே போலவே ஜானகி அம்மாவும் தன் வாழ்வில் பல சொல்ல முடியாத வலிகளைத் தாங்கி வாழ்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். எத்தகைய தனிப்பட்ட துயரங்கள் இருந்தாலும், தனது ஈடு இணையற்ற இசைத் திறமையை ஒவ்வொரு பாடலிலும் அவர் மிகச் சிறப்பாக நிரூபித்துக் காட்டியதாக இளையராஜா நெகிழ்ந்துள்ளார்.
ஒரு பாடலை உருவாக்கும்போது ஒவ்வொரு வாத்தியத்திலும் தான் எதிர்பார்க்கும் துல்லியம் கிடைக்கும் வரை தான் எப்படிச் சமரசம் செய்துகொள்ள மாட்டேனோ, அதே அளவிலான உழைப்பையும் விடாமுயற்சியையும் ஜானகி அம்மாவும் ஒவ்வொரு பாடலையும் பாடும்போது வெளிப்படுத்துவார் என இளையராஜா அவரைப் புகழ்ந்துள்ளார். பாடுவது மட்டுமின்றி, ஏராளமான பஜனைப் பாடல்களை இயற்றி இசையமைக்கும் ஆற்றல் கொண்ட அவர் ஒரு தலைசிறந்த உழைப்பாளி என்றும், அவரது பிரிவால் இந்தியத் திரையிசை உலகில் என்றும் நிரப்ப முடியாத ஒரு மாபெரும் வெற்றிடம் உருவாகியுள்ளது என்றும் தனது புகழஞ்சலியைத் தெரிவித்துள்ளார்.
