CINEMA
“ரூ.1 லட்சம் கொடுத்தா வாய்ப்பு!” – தப்பியோட இதுதான் காரணமா?நடிகைக்கு நேர்ந்த கொடுமை… நெஞ்சை உலுக்கும் உண்மைகள்..!
‘லப்பர் பந்து’, ‘மாமன்’, ‘நூறுசாமி’ போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமான நடிகை ஸ்வாசிகா, தனது ஆரம்பகால திரைப்பயணத்தில் சந்தித்த பல்வேறு கசப்பான அனுபவங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். பள்ளிப்படிப்பை முடித்தவுடன் சினிமா ஆசையுடன் குடும்பத்தினரை மீறி பதினேழு வயதில் சென்னை வந்த அவர், பல போலி ஆடிஷன்களில் சிக்கி பெருமளவு ஏமாற்றமடைந்துள்ளார். சில ஆடிஷன்கள் நடைபெற்ற இடங்கள் ரவுடிகளின் கூடாரம் போல இருந்ததாக அவர் அச்சத்துடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், தங்களுக்கு பெரிய அளவில் சினிமா பிரபலங்களை தெரியாது என்பதைப் பயன்படுத்திக்கொண்ட சிலர், முன்னணி இயக்குநர்களான ஏ.ஆர். முருகதாஸ், லிங்குசாமி போன்றோரின் பெயர்களைக் கூறி வாய்ப்பு வாங்கித் தருவதாக இவர்களிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
சினிமா வாய்ப்புக்காக ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் முன்னணி இயக்குநர்களின் படங்களில் நிச்சயம் நடிக்கலாம் என்ற வார்த்தையை நம்பி, ஸ்வாசிகாவின் தாயார் தனது தங்க நகைகளை விற்று பணத்தைக் கொடுத்துள்ளார். ஆனால், பணத்தைப் பெற்ற இடைத்தரகர் அவர்களை நடுத்தெருவில் விட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார். இதுபோன்ற தொடர் ஏமாற்றங்களாலும் பண இழப்புகளாலும் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான ஸ்வாசிகா, தமிழில் இரண்டு படங்களில் நடித்த பிறகு, பாதுகாப்பான சூழலைத் தேடி தனக்கு நன்கு அறிமுகமான மலையாளத் திரையுலகிற்குச் செல்ல முடிவெடுத்தார். இத்தனை கஷ்டங்களையும் தடைகளையும் தாண்டி இன்று அவர் சினிமாவில் தனக்கென ஒரு வெற்றிகரமான இடத்தைப் பிடித்துள்ளதற்கு, தன் மீது அவர் வைத்திருந்த அசைக்க முடியாத தன்னம்பிக்கையே முக்கிய காரணம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
