CINEMA
“அவங்களுக்கு ஆபரேஷன் முடிஞ்ச முதல் நாள்…” – ராதிகா சரத்குமாரின் ரகசியத்தை மேடையில் அம்பலப்படுத்திய இயக்குநர் சிவக்குமார்…!
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, புதுமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் வெளியான ‘தாய் கிழவி’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. பெண்களின் முன்னேற்றத்தை மையக்கருத்தாகக் கொண்டு உருவான இப்படத்தில், ராதிகா சரத்குமார் முதன்மை வேடத்தில் நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருந்த இந்தத் திரைப்படம், விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் வெறும் 25 நாட்களில் 75 கோடிகளைக் குவித்து, 100 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்துள்ளது.
இப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழாவில் நெகிழ்ச்சியுடன் பேசிய இயக்குநர் சிவக்குமார், நடிகை ராதிகாவின் அசாத்திய அர்ப்பணிப்பைப் புகழ்ந்துரைத்தார். கால் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையிலும், ஒரே நாளில் பல ஆடைகளை மாற்றி கடினமான பாடல் காட்சியை அவர் முடித்துக் கொடுத்ததை வியந்து பாராட்டினார். மேலும், திரையுலகில் தனக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த தயாரிப்பு நிறுவனங்களுக்கும், தனது வாழ்வில் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ள சிவகார்த்திகேயனுக்கும் அவர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். சிவகார்த்திகேயனை ஒரு தயாரிப்பாளராகவும் நாயகனாகவும் மட்டுமன்றி, ஒரு சிறந்த அண்ணனாகவும் கருதுவதாகக் கூறிய அவர், இந்த மாபெரும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தனது ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் தனது நன்றியைச் சமர்ப்பித்தார்.
