CINEMA
“என் அம்மாவை கொன்னுட்டாங்க” சிசிடிவி ஆஃப்… தூக்கில் தொங்கிய சடலம்.. 5 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய கொலையாளிகள்… சிபிசிஐடி பாணியில் அம்பலமான ரூ.15 லட்ச கொடூரக் கொலை..!!
பீகாரில் கஸ்தூரிபா காந்தி பள்ளியின் வார்டன் மரணம் தற்கொலை அல்ல, மாறாக அது திட்டமிடப்பட்ட படுகொலை என்பது ஐந்தாண்டுகளுக்குப் பிறகு நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் தற்போது அம்பலமாகியுள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிகழ்ந்த இந்தச் சம்பவம் ஆரம்பத்தில் காவல்துறையினரால் தற்கொலை வழக்கு என முடிக்கப்பட்ட நிலையில், தனது தாயின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிக்கொண்டு வர அவரது மூன்று மகள்கள் மேற்கொண்ட தொடர் சட்டப் போராட்டமே இந்த வழக்கிற்கு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது.
மகள்களின் முயற்சியால் வழக்கு நீதிமன்றத்தை எட்டிய நிலையில், உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவைத் தொடர்ந்து மாகத் மண்டல ஐஜி விகாஸ் வைபவ் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு மறுவிசாரணை முடுக்கிவிடப்பட்டது. இந்த மறுஆய்வின் போது தடயவியல் துறை அறிக்கைகள் மற்றும் மருத்துவக் குறிப்புகளை ஆராய்ந்ததில், வார்டன் முதலில் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டு, பின்னர் அதைத் தற்கொலை போலக் காட்டுவதற்காக உடல் தொங்கவிடப்பட்டது என்ற அதிர்ச்சி உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.
இந்தக் கொடூரக் கொலைக்குப் பின்னணியில் நிலம் வாங்குவதற்காகக் கொடுக்கப்பட்ட 15 லட்சம் ரூபாய் பணத் தகராறு இருந்தது விசாரணையில் தெரியவந்தது. பணத்தைத் திரும்பக் கேட்டதால் கோபமடைந்த கௌசல் குமார் என்பவர், பள்ளிப் பாதுகாவலர் அஜீத் குமார் பப்லுவுடன் கூட்டு சேர்ந்து சிசிடிவி கேமராக்களை அணைத்துவிட்டு இந்தச் சம்பவத்தை அரங்கேற்றியது கண்டறியப்பட்டு, தற்போது இரு முக்கியக் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
